
தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளை விநாயகர் - நாகலிங்க மரம்
தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப விநாயகர் என்னும் வெள்ளை விநாயகருக்கு கோயில் உள்ளது. வல்லபையை மடியில் வைத்திருப்பதால் வல்லப விநாயகர் என்றும், வெள்ளை நிற தந்தத்தை உடையதால் சுவேத விநாயகர், வெள்ளை விநாயகர் என்றும் பெயர் பெற்றார். வெற்றி தரும் இவரை வழிபட்ட பின்னரே சோழ மன்னர்கள் செயல்களில் ஈடுபட்டனர்.
புராண காலத்தில் முனிவர் ஒருவரின் சாபத்தால் அம்பிகை என்னும் பெண் அரக்கியாக மாறினாள். வல்லபை என அழைக்கப்பட்ட அவள், முனிவர்கள், தேவர்களை பயமுறுத்த ஆரம்பித்தாள். அரக்கியின் தொல்லை தாங்க முடியாமல் சிவபெருமானைச் சரணடைய, அவர் முருகப்பெருமானை அனுப்பினார். வல்லபையை எதிர் கொண்ட முருகப்பெருமான், மனித உடலும் மிருக முகமும் உள்ள ஒருவரால் மட்டுமே அரக்கியை கொல்ல முடியும் என்பதை அறிந்தார். அரக்கியிடம் பயப்படுவது போல நடித்தபடி, 'உன்னை எதிர்க்கும் தைரியம் என் அண்ணன் விநாயகருக்கே உண்டு' என்று சொல்லி விட்டு புறப்பட்டார். விநாயகப்பெருமானிடம் அரக்கியை அழிக்கும்படி வேண்டினார். தம்பியின் வேண்டுதலுக்காக ஆற்றல் நிறைந்தவராக பிரம்மாண்ட வடிவில் தோன்றினார். தன்னை அழிக்கும் ஆற்றல் விநாயகருக்கு உண்டு என்பதை அறிந்த அவள் அழகிய பெண்ணாக வடிவெடுத்து சரணடைந்தாள். விநாயகரும் துதிக்கையால் வல்லபையை துாக்கி மடியில் அமர்த்திக் கொண்டார். விநாயகருக்கும், வல்லபைக்கும் இந்த தலத்தில் திருமணம் நடந்தது.
இத்தலம் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. உற்ஸவ விநாயகர் மணக்கோலத்தில் வல்லபையுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.
இக்கோயிலின் தலவிருட்சம் நாகலிங்க மரம். கவ்ரவ்பிடா கியானன்சிஸ் (Couroupita guianensis) என்னும் தாவரவியல் பெயரும், லிசித்திடேசியே குடும்பத்தைச் சார்ந்ததுமான நாகலிங்க மரத்தின் இலை, வேர், தண்டு, பழங்கள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. நாகலிங்க பூக்களால் சிவபெருமானை அர்ச்சனை செய்தால் பாவ விமோசனம் ஏற்படும். கடன் தொல்லை மறையும். பெரும்பாலான சிவாலயங்களில் நாகலிங்க மரங்கள் இருக்கும்.
இது 3000 ஆண்டுகள் பழமையானது. சிவலிங்கத்தைச் சுற்றி மகரந்தமாக தேவர்களும், லிங்கத்தின் மீது நாகம் படையெடுத்தது போல் பூக்கள் காணப்படும். நாகலிங்கபூ என்று தமிழிலும், ராககேசர், கைலாஷ்மதி என சமஸ்கிருதத்திலும் மல்லிகார்ஜுனப்பூ என தெலுங்கிலும் அழைக்கப்படுகிறது.
பூக்கள் பழங்களாக மாறியபின் ஒன்றரை ஆண்டு மரத்திலேயே இருக்கும். உலர்ந்த பின் சத்தத்துடன் வெடிக்கும். பந்து போன்ற பழங்கள் கீழே விழும் போது வெடி சத்தம் உண்டாவதால் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் கோயில்களில் மட்டுமே நாகலிங்க மரங்கள் வளர்க்கப்பட்டன. பழம் நச்சுத்தன்மை உடையதால் சாப்பிடுவதில்லை. இதிலுள்ள வேதி சத்துகள் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மையுடையதால் உலர்ந்த நாகலிங்க பூவிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் தேமல், படை மறைய உதவுகிறது. முழு செடியையும் நீரில் கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றுவலி நீங்கும். இலையின் சாற்றை தடவி வர தோலில் ஏற்படும் தடிப்பு, புண்கள் குணமாகும். மரத்தின் பட்டையை கஷாயம் செய்து சாப்பிட குளிர் காய்ச்சல் நீங்கும். இளம்தளிர் இலைகளை மென்று துப்ப பல்வலி குறையும். நாகலிங்க பூக்கள் மூலம் எண்ணெய், நறுமணத்தைலம் தயாரிக்கலாம்.
எப்படி செல்வது : தஞ்சாவூர் - திருச்சி சாலையில் இருந்து 7 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 93459 59997
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567