ADDED : செப் 27, 2018 02:23 PM

'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பது பழமொழி. 'எட்டிப்பிடிக்கும் இடமெல்லாம் எட்டுக்குடி முருகன் இருப்பான்' என்பது புதுமொழி. புதியது, பழையது எல்லாம் நமக்குத் தான்...முருகனுக்கு இல்லை.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொருள்வைத்தசேரி என்ற கிராமம். அங்கு 'சரவணபவ' என்ற சிற்பி வாழ்ந்தார். எப்போதும் 'சரவணபவ' மந்திரம் சொல்பவர் என்பதால் அதுவே பெயரானது. முருகன் மீது பக்திமிக்க அவர் முருகன் சிலை ஒன்றை வடித்தார். ஊரார் அதை பார்த்துச் சென்றனர். இந்த விஷயம் மன்னர் பராந்தகசோழனை எட்டியது. கம்பீரமாக மயில் மீதிருந்த முருகன் சிலையைப் பார்த்த மன்னர் ஆச்சரியப்பட்டார். சிற்பிக்கு பெருமை தாங்கவில்லை.
இந்நிலையில் அதிகாரிகள் காதில் முணுமுணுத்து விட்டு கிளம்பினார் மன்னர். உடனே பரபரத்த அதிகாரிகள் மக்களை அப்புறப்படுத்தினர். சிற்பிக்கோ அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கை, கால்கள் கட்டப்பட்டன. சட்டென அவரது கை கட்டை விரல்கள் வெட்டப்பட்டன. கதறி அழுத சிற்பிக்கு அப்போது தான் புரிந்தது... இந்தச் சிலை போல வேறொன்றை எதிர்காலத்தில் யாருக்கும் செய்து தரக் கூடாது என மன்னன் நினைத்தான் என்பது.
சிற்பி அங்கிருந்து பக்கத்து கிராமத்திற்கு இடம் பெயர்ந்தான். குடில் அமைத்து தங்கினான். காயம் ஆறிய பின், மனதில் மெல்ல உற்சாகம் பிறந்தது. யாருக்கும் தெரியாமல் முருகன் சிலை வடிக்க விரும்பினான். கட்டை விரல் இல்லாவிட்டாலும் விடாமுயற்சியால் ஒரு வழியாகச் செய்து முடித்தான். பழையதை விட புதியது சிறப்பாக அமைந்தது. இதைக் கேள்விப்பட்ட குறுநில மன்னர் முத்தரசன் வந்தார். சிலையின் அழகைக் கண்டு வியந்தார். அப்போது சட்டென சிலையாக இருந்த மயில் பறக்கவே மன்னர், 'எட்டிப்பிடி எட்டிப்பிடி' என சப்தமிட்டார். பணியாட்களும் மயிலைப் பிடித்து அதன் கால்களைக் கட்டினர். மீண்டும் மயில் சிலையாக மாறி நின்றது. அந்த இடத்தில் முருகன் கோயில் எழுப்பப்பட்டது. அந்த 'எட்டிப்பிடி'யே தற்போது 'எட்டுக்குடி' என அழைக்கப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமி என்னும் பெயரில் இங்கு வீற்றிருக்கிறார் முருகன்.
சூரசம்ஹாரத்தில் முருகனுக்கு உதவிய நவவீரர்கள் சிலை இங்குள்ளன. பெருமாள், ஆஞ்சநேயர், சனீஸ்வரர், பைரவர், ஜூரதேவர் சன்னதிகள் உள்ளன. வான்மீகர் என்னும் சித்தரின் சமாதி மீதுள்ள வன்னிமரத்தை கிரகதோஷம் அகல வழிபடுகின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில் நீராடினால் பாவம் தீரும். பயந்த சுபாவமுள்ள குழந்தைகளின் பெயருக்கு அர்ச்சனை செய்ய பயம் தீரும். எதிரி தொல்லை அகல சத்ரு சம்ஹார திரிசதை என்னும் பூஜை நடக்கிறது.
எட்டுக்குடி முருகனை கெட்டியாக பிடியுங்கள். துயர் தீண்டாதபடி எட்டாத உயரத்தில் உட்கார வைத்து அழகு பார்ப்பான்!
எப்படி செல்வது: நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் 20 கி.மீ.,
விஷேச நாட்கள்: திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, சித்ரா பவுர்ணமியில் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை
நேரம்: அதிகாலை 4:30 - மதியம் 12:30 மணி ; மாலை 4:30 - இரவு 09:00 மணி
தொடர்புக்கு: 04366 - 245 426.
அருகிலுள்ள தலம்: 22 கி.மீ., தொலைவில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்