ADDED : பிப் 25, 2014 05:08 PM

* மெய்ப்பொருளாகிய சிவம் என்பது இயங்கும் போது சக்தியாகிறது. சக்தி தன் இயக்கத்தை நிறுத்தும்போது சிவமாகி விடுகிறது.
* எந்தப் பொருளைப் பார்த்தாலும், மெய்ப்பொருளான சிவமாகிய கடவுளையே பார்க்கப் பழகுங்கள். இதனால், 'நான்' என்னும் சிறிய எண்ணம் அற்றுப் போய் விடும்.
* அன்பும் சிவமும் இரண்டும் ஒன்றே. சிவமாகிய இறைநிலையை உணர்ந்தால், மனம், அன்பு நிலையில் மலரத் தொடங்கும்.
* உலகில் நிகழும் ஒவ்வொன்றும் கடவுளின் செயலே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இயற்கை, நீதி, தர்மம் இவற்றுக்கு முரண்படாமல் வாழ முடியும்.
* கடமையை உணர்ந்து செயலாற்றினால், சமுதாயத்தில் எல்லா மக்களின் உரிமையும், நலமும் காக்கப்படும்.
* கடமையில் சிறந்தவன் கடவுள் நாட்டமுடையவனாக இருப்பான். கடவுளை உணர்ந்தவன் கடமையில் ஈடுபாட்டுடன் இருப்பான்.
* உள்ளத்தில் கருணை, உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் இவையே நல்லோரின் அடையாளங்கள்.
* ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். வாழ்வில் உயர்வு அடைவீர்கள்.
* கடவுளே எல்லாமுமாக இருக்கிறார். நமக்கும் கடவுளுக்கும் ஒரு சங்கிலிப்பிணைப்பு இருக்கிறது.
* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வில் துன்பமே அதிகமாகும்.
* இன்பம் பெற வேண்டுமானால், உணவு, உறக்கம், உழைப்பு, எண்ணம் என ஒவ்வொன்றையும் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இனிய மொழி பேசுபவர்கள், உலகையே வசப்படுத்துவதோடு, வெற்றிகரமான வாழ்வு நடத்தும் ஆற்றல் பெற்றிருப்பர்.
* பிறக்கும் போது யாரும் எதுவும் கொண்டு வந்ததில்லை. போகும் போதும் கொண்டு போவதும் இல்லை. இந்த சமுதாயமே நமக்கு வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது.
* அறிவாற்றல், உடல் ஆற்றல் இரண்டாலும் முடிந்த செயல்களை, சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டியது மனிதனின் கடமை.
* 'வாழ்க வளமுடன்' என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது, பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது.
* பிறருக்கு நன்மையைச் செய்வதும், பயன் பெற்றவர்கள் நிறைவோடு வாழ்த்துவதும் தான் உண்மையான புகழாகும்.
* உண்மையில் மனிதனுக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்றால், அது அவன் உள்ளத்தில் எழுகின்ற ஒழுங்கற்ற எண்ணம் தான்.
* எண்ணத்தில் உறுதியும், ஒழுக்கமும் ஏற்பட்டு விட்டால், எண்ணிய அனைத்தையும் எண்ணிய படியே பெற்று மகிழலாம்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதையே அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.
* உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம் மனதில் தான் இருக்கிறது. தன்னைத் தானே சீர்படுத்திக் கொண்டு விட்டால், இந்த மண்ணிலுள்ள எல்லா இன்பமும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.
* வாழ்வில் வெற்றி பெற விரும்பினால், எதிர் வரும் பிரச்னையை நேருக்கு நேர் துணிவுடன் மோதும் அணுகுமுறை வேண்டும்.
* ஆசையை அடியோடு ஒழித்து விடுவது இயலாத காரியம். ஆசையை சீர்படுத்திக் கொண்டால் வாழ்வில் துன்பம் குறைந்து விடும்.
சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி

