ADDED : மார் 23, 2018 09:40 AM

பங்குனி உத்திரத் திருவிழாவின் போது மூன்று முறை திருமணம் செய்யும் அதிசய முருகனை தரிசிக்க வேண்டுமா... செல்லுங்கள், பெரம்பலுார் செட்டிகுளத்திற்கு!
தல வரலாறு: செட்டி குளத்திலிருந்த ஒரு அரச மரத்தின் அருகே, நள்ளிரவில் பேரொளியுடன் தோன்றிய சிவலிங்கத்திற்கு தேவர்கள் சிலர் பூஜை செய்தனர். இதை கண்ட வணிகன் ஒருவன், மன்னன் பராந்தக சோழனிடம் தகவல் தெரிவித்தான். அரண்மனையில் விருந்தினராக இருந்த மன்னன் குலசேகர பாண்டியனையும் தன்னுடன் அழைத்து வந்தான். ஆனால், வணிகன் சொன்னது போல ஏதும் தென்படவில்லை. அப்போது கையில் கரும்புடன் வந்த முதியவர், ஓரிடத்தில் சிவலிங்கத்தை காட்டி விட்டு, அருகிலுள்ள குன்றில் ஏறி முருகனாக காட்சியளித்து மறைந்தார். இதனடிப்படையில், 'தண்டாயுதபாணி' என்ற பெயரில் குன்றில் முருகனுக்கும், 'ஏகாம்பரேஸ்வரர்' என்ற பெயரில் சிவனுக்கும் கோயில் எழுப்பப்பட்டது.
கையில் கரும்பு: கையில் கரும்பு ஏந்தியபடி, தலையில் குடுமியுடன் காட்சியளிக்கிறார் முருகன். உற்சவர் கையில் வேல் இருக்கிறது. கரும்பு, வெளியே கரடு முரடாக இருந்தாலும், உள்ளே இனிமையான சாறு இருக்கும். இதை போல, மனிதனும் வெளித் தோற்றத்தில் எப்படி இருந்தாலும், உள்ளே நல்ல மனதை கொண்டிருக்க வேண்டுமென்பதை இவர் உணர்த்துகிறார்.
சித்திரை மாத பிறப்பன்று இங்குள்ள 240 படிகளுக்கும் சிறப்பு பூஜை நடக்கும். பொதிகைமலை செல்லும் வழியில் அகத்தியர், இந்த முருகனை தரிசிக்க வந்தார். அப்போது, முருகன் வளையல் விற்கும் செட்டியாராக காட்சி தந்தார். அதனால் இவ்வூர் 'செட்டி குளம்' எனப்பட்டது. 'வடபழநி' என்ற பெயரும் இதற்குண்டு. மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகியை, இந்த முருகன் சாந்தப்படுத்தினார். உக்கிரம் குறைந்த அவள், அருகிலுள்ள சிறுவாச்சூரில் மதுரகாளியம்மனாக வீற்றிருக்கிறாள்.
கரும்புத்தொட்டில்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், சஷ்டி அன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பங்குனி உத்திரத்தன்று, குழந்தையை கரும்புத்தொட்டிலில் வைத்து கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த தானியம், பழம், காய்கறிகளை முருகனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.மலையடிவாரத்தில் விநாயகர், நடுவே இடும்பன், முகப்பில் ராஜகணபதி, வீரபாகு சன்னதிகள் உள்ளன. தலவிருட்சமாக வில்வம் உள்ளது.
மூன்று திருக்கல்யாணம்: ஆண்டுக்கு ஒருமுறை தான் திருக்கல்யாணம் நடத்தப்படும். ஆனால் இங்கு, பங்குனி உத்திர பிரம்மோற்ஸவத்தின் 5,7, 9ம் நாட்களில் திருக்கல்யாணம் இந்தாண்டு மார்ச் 26,28,30ல் நடக்கிறது. திருமணத்தடை நீங்க, இந்த வைபவத்தில் பங்கேற்கின்றனர். விழா நாட்களில் தினமும் சுவாமி காலை, மாலையில் கிரிவலமாக எழுந்தருள்கிறார்.
எப்படி செல்வது
பெரம்பலுார் - திருச்சி ரோட்டில் 15 கி.மீ.,யில் (திருச்சியில் இருந்து 44 கி.மீ.,) ஆலத்துார் சென்று, அங்கிருந்து 8 கி.மீ.,யில் செட்டிகுளம்
விசேஷ நாட்கள்: பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி
நேரம்: காலை 8:00 - 1:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
வெள்ளி, கார்த்திகையன்று காலை முதல் இரவு வரை நடை திறந்திருக்கும்
தொடர்புக்கு: 04328 - 268 008
அருகிலுள்ள தலம்: 14 கி.மீ.,யில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்