ADDED : ஆக 22, 2017 09:46 AM

கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் பவுர்ணமி விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும்.
தல வரலாறு: முக்தராஜன் என்னும் அம்மன் பக்தன் இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். அவனை அரசனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வமான பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.
பராசக்தி மன்னனின் கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பல் ஆனான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு கோயில் கட்டி 'நிமிஷாம்பாள்' என பெயரிட்டான். 'கண நேரத்தில் வரம்
அளிப்பவள்' என்பது பொருள்.
தர்மம் காப்பவள்: 'கிருஷ்ண சிலா' என்னும் கருப்பு சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில் சூலம், உடுக்கை உள்ளது. தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் அம்மனின் தலைமீது தர்ம சக்கரம் குடையாக நிற்கிறது. லலிதா சகஸ்ரநாமத்தில் 281வது நாமாவாக 'ஒன்னுமேஷ நிமிஷோத் பன்ன விபன்ன புவனாவல்லே நம:' என்று அம்பிகை போற்றப்படுகிறாள். அம்பாள் நிமிஷ நேரத்தில் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவள் என்பது இதன் பொருள். வைகாசி வளர்பிறை தசமியன்று நிமிஷாம்பாள் ஜெயந்தி நடக்கும். அதில் 108 கலசாபிஷேகம், துர்கா ஹோமம் நடக்கும். மன்னர் மும்முடி
கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது.
பவுர்ணமி விரதம்: பவுர்ணமியன்று விரதமிருந்து அம்மனை தரிசிக்கின்றனர். எதிரி பயம், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும் விரதம் மேற்கொள்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பாலபிஷேகம் செய்கின்றனர். கோயில் முன்பு காவிரி ஓடுகிறது.
ஐந்து சன்னதிகள்: விநாயகர், சிவன், பார்வதி, சூரியன், விஷ்ணு ஆகிய ஐந்து தெய்வங்களையும் இணைத்து சனாதன தர்மத்தை ஆதிசங்கரர்
ஏற்படுத்தினார். அதை பிரதிபலிக்கும் விதமாக இங்கு ஐந்து சன்னதிகள் உள்ளன. சூரியன், அனுமன் மேற்கு நோக்கி உள்ளனர்.
அர்ச்சகர்கள் அமர்ந்தே பூஜை செய்கின்றனர். எல்லா சன்னதியிலும் தீர்த்தம் தரப்படுகிறது.
எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 18 கி.மீ.,
விசேஷ நாட்கள்: வைகாசியில் நிமிஷாம்பாள் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, அனுமன் ஜெயந்தி, ரத சப்தமி
நேரம்: காலை 6:00 - இரவு 8:30 மணி.
தொடர்புக்கு: 08236 - 252 640