
திருநள்ளாறு சனீஸ்வரர்
சேதி நாட்டு இளவரசியான தமயந்தியை தேவர்கள் மணம்புரிய விரும்பிய நிலையில், நிடத நாட்டு மன்னன் நளன் திருமணம் செய்தான். கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரரின் உதவியை நாடினர். நளனின் மனஉறுதியை எடுத்துக்காட்ட ஏழரை ஆண்டுகள் சனீஸ்வரர் பீடித்தார். கட்டிய ஆடையைக் கூட இழந்து அவதியுற்ற நளன் எந்த இடத்திலும் மனம் கலங்கவில்லை. சிவத்தலமான திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான். நளனின் வேண்டுகோளுக்கு இணங்கி, சனீஸ்வரர் இங்கு தங்கினார். சனிக்குரிய திசை தெற்கு. ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
எப்படி செல்வது
* காரைக்காலில் இருந்து 5 கி.மீ.,
* மயிலாடுதுறையில் இருந்து 33 கி.மீ.,
தொடர்புக்கு: 04368 - 236 530
கல்பட்டு விஸ்வரூப சனீஸ்வரர்
விழுப்புரம் அருகிலுள்ள கல்பட்டு கிராமத்தில், 21 அடி உயர விஸ்வரூப சனீஸ்வரர், இடது காலை தரையில் வைத்து, பிரமாண்டமான காகத்தின் மீது வலது காலை ஊன்றிய நிலையில் இருக்கிறார். இவரை சனிக்கிழமையில் வழிபட்டால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்டமத்துச்சனி தோஷம் நீங்கும்.
எப்படி செல்வது
விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலையில் 15 கி.மீ., துாரத்தில் மாம்பழபட்டு கிராமம். இங்கிருந்து பிரியும் சாலையில் 1 கி.மீ.,
தொடர்புக்கு: 97868 65634, 04146 - 264 366
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்
மனிதர்கள் செய்யும் நன்மை, தீமைக்கு ஏற்ப பாரபட்சம் பார்க்காமல் சனீஸ்வரர் பலன் கொடுப்பார்.
ஆனால் சனியால் கிடைக்கும் நன்மை கண்டு மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி முன்பு பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. திருக்கொள்ளிக்காட்டில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் சனிபகவான்.'பொங்கு சனியாக' அவரை சிவபெருமான் மாற்றினார். இவரே இங்கு தனி சன்னதியில் இருக்கிறார். 'உழைப்பவருக்கே அருள்புரிவேன்' என்னும் தத்துவத்தின் அடிப்படையில் கலப்பை ஏந்தியபடி இருக்கிறார்.
எப்படி செல்வது
திருவாரூர் - திருத்துறைபூண்டி சாலையில் கச்சனம் வழியாக 28 கி.மீ.,
தொடர்புக்கு: 04369 - 237 454
சோழவந்தான் சுயம்பு சனீஸ்வரர்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மேற்கு நோக்கி சனீஸ்வரர் இருக்கிறார். 500 ஆண்டு பழமையான இக்கோயிலின் தலவிருட்சம் மாவலிங்க மரம். இது விசாக நட்சத்திர பரிகார தலம். சனிதிசை, சனி புத்தி, ஏழரை, அஷ்டமச்சனியால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை எள், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி ஒன்பது முறை வலம் வருகின்றனர்.
எப்படி செல்வது:
மதுரையில் இருந்து 25 கி.மீ.,
தொடர்புக்கு: 97504 70701
குச்சனுார் சனீஸ்வரர்
மன்னரான தினகரன் குழந்தை வரம் பெற விரதம் மேற்கொண்டார். ''அந்தணச் சிறுவன் ஒருவன் உன் வீட்டுக்கு வருவான். அவனை வளர்த்து வா. பிறகு உனக்கும் குழந்தை பிறக்கும்'' என அசரீரி கேட்டது. அதன்படி அந்த சிறுவனுக்கு 'சந்திரவதனன்' என பெயரிட்டு வளர்த்தார். பின்னர் மன்னருக்கும் குழந்தை பிறக்க, 'சதாகன்' என பெயரிட்டார். எனினும் வளர்ப்பு மகன் சந்திரவதனனுக்கு முடி சூட்டினார். இந்நிலையில் மன்னருக்கு ஏழரைச்சனி பிடித்தது. தந்தை மீது அன்பு கொண்ட சந்திரவதனன், இரும்பால் சனீஸ்வரர் உருவம் செய்து, ' உத்தமரான என் தந்தைக்கு தரும் துன்பத்தை எனக்கு கொடு'' என்று வேண்டினான். சனீஸ்வரர் அவனது தியாகத்தைப் பாராட்டி, ஏழரை நாழிகை மட்டுமே பீடித்து விலகினார். சந்திரவதனன் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து, சனீஸ்வரருக்கு கோயில் எழுப்பினான். இதனால் குச்சனுார் எனப்படுகிறது. சனீஸ்வரர் இங்கு லிங்க வடிவில் உள்ளார்.
எப்படி செல்வது:
தேனியிலிருந்து 30 கி.மீ.,
தொடர்புக்கு: 97895 27068, 04554 - 247 285
இலத்துார் பொங்குசனி
இலத்துார் மதுநாதசுவாமி கோயிலில் பொங்கு சனீஸ்வரர் சன்னதி உள்ளது. வழிபடுவோருக்கு அபயம் அளிப்பவராக அபயஹஸ்த நிலையில் இருக்கிறார்.
எப்படி செல்வது:
தென்காசியில் இருந்து சாம்பவர் வடகரை செல்லும் சாலையில் 6 கி.மீ.,
ஸ்ரீவைகுண்டம் சனீஸ்வரர்
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. கைலாசநாதருக்கும், சனீஸ்வரருக்கும் சிறப்பு பூஜை செய்கின்றனர். சனி திசை, சனி புத்தி காலத்தில் இழந்த சொத்தை மீண்டும் கிடைக்க எள்தீபம் ஏற்றுகின்றனர். திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு ஈடாக விளங்கும் இத்தலம் நவகைலாய தலங்களில் ஒன்றாகும்.
எப்படி செல்வது: திருநெல்வேலி - திருச்செந்துார் சாலையில் 30 கி.மீ.,
தொடர்புக்கு: 04630 - 256 492
சிங்கனாப்பூர் சனிபகவான்
மகாராஷ்டிரா மாநிலம் சிங்கனாப்பூரில் சனிபகவான் கோயில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கனமழையால் இங்குள்ள பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பெரிய கல் ஒன்று ஒதுங்கியது. கிராமத்தினர் சிலர் அதில் ரத்தம் வருவதைக் கண்டனர். அன்றிரவு கிராம தலைவரின் கனவில் தோன்றி, கல் வடிவில் வந்திருக்கும் தன்னை பிரதிஷ்டை செய்து வழிபடும்படி சனிபகவான் தெரிவித்தார். அதன்படி ஐந்தடி உயர சுயம்பு சனிபகவான் வழிபாடு இங்கு தொடங்கியது. இக்கோயிலுக்கு மேற்கூரை, சுற்றுச்சுவர் இல்லை. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூடுகின்றனர். நல்லெண்ணெய், கறுப்பு உளுந்து படைத்து வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது:
ஷீரடியில் இருந்து 60 கி.மீ., பூனாவில் இருந்து 160 கி.மீ., மும்பையில் இருந்து 265 கி.மீ. தொலைவில் சிங்கனாப்பூர் உள்ளது.