
வானத்தையே எல்லையாகக் கொண்டு கூரை இன்றி திருவனந்தபுரம் கரமனையில் தர்மசாஸ்தா கோயில் கொண்டிருக்கிறார். இக்கோயில் திருவனந்தபுரத்தின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் பகுதி முழுவதும் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்பர். இப்பகுதியை ஆண்ட கரமனை மகாராஜா ஒருநாள் வேட்டைக்காக காட்டு வழியே சென்ற போது ஓரிடத்தில் சிலந்திகள் வலை பின்னியிருப்பதையும், அதனடியில் சாஸ்தா சிலை புதைந்திருப்பதையும் கண்டார். அதை ஊருக்குள் கொண்டு வந்து கோயில் கட்ட முடிவு செய்தார்.
ஆனால் அன்றிரவு கனவில் சாஸ்தா, ''என்னை எடுத்துச் செல்ல வேண்டாம். காட்டில் இருப்பதையே விரும்புகிறேன். சிலந்திகள் வலை கட்டியுள்ள இந்த இடத்திலேயே கோயில் எழுப்பு. கூரை இல்லாமல் வானமே எல்லையாக இருக்கட்டும்'' என உத்தரவிட்டார். அதன்பின் சிலை கண்டெடுத்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டது.
இக்கோயிலில் சிலந்தி வலை போல மேற்கூரை கூம்பு வடிவில் உள்ளது. கருவறையின் நான்கு பக்கமும் பலகணி (ஜன்னல்) வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். திருவனந்தபுரத்தில் உள்ள கோயில்களில் பழமையானது இது என்பதால் ஆதிசாஸ்தா கோயில் எனப்படுகிறது.
திருவனந்தபுரம், கரமனையை சேர்ந்தவர்கள் இக்கோயிலைச் சபரிமலைக்கு ஈடானதாக கருதுகின்றனர். ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து வழிபடுகின்றனர். மாதப்பிறப்பு நாட்களிலும் சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடக்கிறது. குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு இங்கு முதல் பத்திரிக்கை வைக்கின்றனர். அரசமரத்தடியில் சிவலிங்கம், நாகர் சிலைகள் உள்ளன.
எப்படி செல்வது
* திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ.,
விசேஷ நாள்
கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாள் மண்டல பூஜை, 41ம் நாள் கரமனை ஆற்றில் ஆராட்டு
நேரம்
அதிகாலை 5:00 - 11:00 மணி
மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு
0471 -- 245 1837
அருகிலுள்ள தலம்
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்
நேரம்: அதிகாலை 4:15 - 12:00 மணி
மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0471 - 245 0233