ADDED : செப் 22, 2017 10:08 AM

ஹயக்ரீவரை, சுவாமி வேதாந்த தேசிகன் நேரில் தரிசித்த தலம் கடலூருக்கு அருகிலுள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ளது. இது ஹயக்ரீவரின் முதல் கோயில்.
தல வரலாறு: அசுரர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பூலோகத்திலுள்ள ஔஷதாசலத்தில் தங்கியிருந்து தன்னை வழிபட்டு வரும்படியும், தக்க சமயத்தில் உதவுவதாகவும் அவர் வாக்களித்தார். அதன்படி, சக்கராயுதத்தை ஏவினார். அது அசுரர்களை அழித்தது.
தேவர்களுக்கு மும்மூர்த்தி வடிவில் இத்தலத்தில் விஷ்ணு காட்சியளித்தார். அவருக்கு தேவர்களின் தலைவன் என்ற பொருளில் 'தேவநாத சுவாமி' என பெயர் ஏற்பட்டது.அதன் பின் ஆதிசேஷன் இங்கு ஒரு நகரத்தை உருவாக்கினார். அதற்கு திரு அஹீந்திர (ஆதிசேஷ) புரம் என்ற பெயர் ஏற்பட்டது.
பிரார்த்தனைக் கிணறு: ஒருமுறை விஷ்ணுக்கு தாகம் ஏற்பட்ட போது, கருடனிடம் தண்ணீர் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதி சேஷனிடம் கேட்டார். அவர் தன் வாலால் தரையில் அடிக்க தீர்த்தம் பீறிட்டது. தெற்குப் பிரகாரத்தில் கிணறாக உள்ள இத்தீர்த்தம் சேஷ தீர்த்தம் எனப்படுகிறது. தற்போது பிரார்த்தனைக் கிணறாக இருக்கும் இதில் உப்பு, மிளகு, வெல்லமிட்டு பிரார்த்தனை செய்கின்றனர். இங்கு வழிபட சர்ப்ப தோஷம் விலகும். திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
முதல் கோயில்: தேவநாத சுவாமி கோயில் அருகில் பிரம்மாச்சலம் மலை உள்ளது. இது 73 படிகள் கொண்டது. இங்கு லட்சுமி ஹயக்ரீவருக்கு தனி
சன்னதி உள்ளது. வேதாந்த தேசிகன் இம்மலை மீது தவம் புரிந்து ஹயக்ரீவர், கருடாழ்வார் ஆகியோரின் தரிசனத்தை பெற்றார். ஹயக்ரீவருக்கு கட்டப்பட்ட முதல் கோயில் இது. வியாழக்கிழமை தோறும் மாணவர்கள் ஹயக்ரீவருக்கு துளசி, கல்கண்டு, தேன் படைக்கின்றனர்.
எப்படி செல்வது: கடலூர் - பண்ருட்டி வழியில் 6 கி.மீ.,
விசேஷ நாட்கள்: சித்திரை பிரம்மோற்ஸவம், வைகாசியில் நம்மாழ்வார் சாற்றுமுறை, நரசிம்ம ஜெயந்தி, புரட்டாசி மகாதேசிகன் பிரம்மோற்ஸவம்
நேரம்: தேவநாதர் கோயில்
காலை 6:00 - 12:00 மணி
மாலை 4:00 - 8:00 மணி
ஹயக்ரீவர் கோயில்
காலை 7:00 - 11:30 மணி
மாலை 4:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 04142 - 287 515
அருகிலுள்ள தலம்: 17 கி.மீ.,ல் சிங்கிரிகுடி நரசிம்மர் கோயில்