
விநாயகர் வழிபாட்டில் முதலிடம் பெறுவது தோப்புக்கரணம். இதை உணர்ந்தவர்கள் தோப்புக்கரணம் இட மறக்க மாட்டார்கள்.
தேவர்களை அடிமையாக்கினான் அசுரன் கஜமுகன். தினமும் 3024 தோப்புக்கரணம் இட வேண்டும் எனக் கட்டளையிட்டான். அவர்கள் விநாயகரை சரணடைய, அவர் அவனைக் கொன்றார். அதற்கு நன்றிக்கடனாக விநாயகருக்கு 3024 தோப்புக்கரணம் இடப் போவதாக தேவர்கள் தெரிவித்தனர். தினமும் மூன்று முறை தோப்புக்கரணம் இட்டால் போதும் என்றார் விநாயகர்.
இதே போல தோப்புக்கரணம் பற்றிய இன்னொரு புராண சம்பவமும் உண்டு.
அகத்திய முனிவரின் கமண்டலத்திற்குள் அடைபட்ட காவிரி, ஆறாக ஓடினால் மக்கள் பயன் பெறுவர் என தேவர்கள் விரும்பினர். இதை செய்யத் தகுதியானவர் விநாயகர் எனக் கருதி வேண்டுகோள் விடுத்தனர்.
காகமாக மாறிய அவர், அகத்தியரின் கமண்டல நீரைக் கீழே கவிழ்த்தார். கோபம் கொண்ட அகத்தியர் விரட்டிய போது சிறுவனாக மாறி நின்றார். ''ஏன் இப்படி செய்தாய்?'' என சிறுவனின் தலையில் குட்டினார். அதன்பின் தன் உண்மை கோலத்தைக் காட்டினார் விநாயகர். திடுக்கிட்டு, ''சுவாமி... தவறு செய்த என்னை மன்னியுங்கள்'' என தன்னைத் தானே குட்டிக் கொண்டார். ''அகத்தியரே! காவிரியால் மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக நடத்திய திருவிளையாடல் இது. எங்கும் வளம் பெருகட்டும்'' என விநாயகர் வரம் அளித்தார்.
''தலையில் குட்டி தோப்புக்கரணம் இடும் உன் பக்தர்களை தவறுகளில் இருந்து விடுவித்து அருள வேண்டும்'' என அகத்தியர் வேண்டினார். விநாயகரும் சம்மதிக்கவே, அன்று முதல் குட்டிக் கொண்டு தோப்புக்கரணமிடும் பழக்கம் வந்தது.
அறிவியல் ரீதியாக யோகப் பயிற்சிகளில் தோப்புக்கரணமும் ஒன்று. கைகளால் நெற்றிப்பொட்டில் குட்டும் போது நரம்புகள் துாண்டப்பட்டு சுறுசுறுப்பு அடைகின்றன. தலையில் ரத்த ஓட்டம், மூளையின் செயல்பாடு சீராக இருந்தால் உடலும் ஆரோக்கியம் பெறும்.
காது மடல்களை இழுத்தபடி உட்கார்ந்து எழுவதால், மமகாரம் (என்னுடையது) என்ற எண்ணம் மறையும். ஆணவம் உண்டாகாது. காது மடல்களை இழுத்தால் சேட்டை குறையும் என்பதால் தான் அக்காலத்தில் மாணவர்களின் காதை திருகி தோப்புக்கரணம் இடும் வழக்கம் இருந்தது. தண்டனையாக செய்யாமல் பக்தியுடன் தோப்புக்கரணம் இட்டால் நமக்கு நாமே புத்துணர்வு பெற்றவர்களாவோம்.
தினமும் காலையில் தோப்புக்கரணம் இட்டால் ஞாபக சக்தி, சுறுசுறுப்பு, புத்துணர்வு, ஆரோக்கியமான கால்கள், சீரான ரத்த ஓட்டம் ஏற்படும். ஆன்மிகம், அறிவியல் பூர்வமான சூப்பர் பிரைன் யோகாவான தோப்புக்கரணத்தை வழிபாட்டில் உருவாக்கினர். இதனால் உடல் நலமும், விநாயகரின் அருளும் கிடைக்கும்.