
சாதாரண மனிதர்களாகப் பிறந்து வாழ்வின் உண்மையான உண்மையைத் தேடி அலைந்து உணர்ந்து ஞானிகளாக, மகான்களாக, யோகிகளாகப் பரிணமித்து நிற்பவர்கள் சித்தர்கள். தங்கள் அனுபவங்களாலும் சிந்தனை செயல்களாலும் மனித குலம் உய்யப் பல மகத்தான உண்மைகளை உபதேசித்த அவர்கள், தம்மை வழிபடுவோரின் இன்னல்களைத் தீர்த்து வைத்து நல்வழி காட்டுகின்றனர். ஆன்ம நலத்தைப் போதித்து உயர்த்துகின்றனர்.
சித்தர்களில் பல வகையினர் உண்டு. பல தரப்பினர் உண்டு. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். இவர்களில் ஒரே நேரத்தில், பல இடங்களில், பல நபர்களுக்குக் காட்சி தந்த சித்தர்கள் முதல் வானத்தில் பறந்த சித்தர்கள் வரை பலர் உண்டு.
மாயமாய் மறைந்தவர்
ஒரு சமயம் திருநெல்வேலி கடைத் தெருவில் சித்தர் ஒருவர் கோவணத்துடன் சுற்றிக் கொண்டிருந்தார். அவர் சித்தர் என்பதை அறியாத சில வியாபாரிகளுக்கு அது இடைஞ்சலாக இருந்தது. அவர்கள் காவல்துறையினரிடம் புகார் சொல்ல
காவலர் ஒருவர் சித்தரைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தார். சித்தரோ அந்தக் காவலாளிக்கு பயந்தது போல் அங்குமிங்கும் ஓடி நகராட்சிக்குச் சொந்தமான ஒரு பெரிய குப்பைத் தொட்டிக்குள் ஒளிந்து கொண்டார். காவலரோ குப்பைத் தொட்டி என்பதால் அருவருப்புடன், அருகிலேயே நின்றபடி சித்தரை வெளியில் வருமாறு கூறிக் கத்திக் கொண்டிருந்தார். ஆனால் சித்தர் வெளியே வரவே இல்லை.
கிட்டத்தட்ட அரைமணிக்கு மேல் ஆகியும் அவர் வெளியே வராததால் ஆத்திரமுற்ற காவலர், “இந்தப் பைத்தியத்தைப் பிடித்து நன்றாக உதைக்க வேண்டும்” என நினைத்தவாறே, மற்றொரு காவலர் உதவியுடன் அந்தப் பெரிய குப்பைத் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தார். அதிர்ச்சி அடைந்தார். சித்தர் அங்கு காணப்படவில்லை. எங்கோ மாயமாய் மறைந்து விட்டிருந்தார்.
“நான் அருகில் நின்றிருக்கும் போது எப்படி இவர் வெளியே போயிருக்க முடியும், அது எப்படிச் சாத்தியம்... இவர் மிகப் பெரிய சித்தராய்த்தான் இருக்க வேண்டும்,
அபச்சாரம் செய்து விட்டோம்” என
நினைத்து மனம் வருந்தினார் காவலர். மன்னிப்புக் கேட்பதற்காகச் சித்தரை நகரெங்கும் தேடிப் பார்த்தார். பலனில்லை. சித்தர், அவர் கண்ணுக்கு அகப்படவேயில்லை. மாயமாய் மறைந்தவர் மறைந்தவர் தான்.
இப்படித் தம் வாழ்வில் எண்ணற்ற அற்புதங்களைப் புரிந்த சித்தர்களின் பெருமை சொல்லற்கரியது.
இவ்வாறு வாழ்ந்த பன்னிரு சித்தர்களின் அற்புத வாழ்க்கையைப் பற்றி அறிய, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடான, பா.சு.ரமணன் எழுதிய 'சித்தர்கள் வாழ்வில்' புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். இதைப் பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.