
மறுமை நாளில் இறைவன் முன் மனிதன் நிறுத்தப்படுவான். அப்போது கேட்கப்படும் கேள்விகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் அந்த நிலையிலும் மனிதன் எப்படி செயல்படுவான் தெரியுமா...
'உனக்கு பணத்தையும், வளமான வாழ்க்கையும் தரப்பட்டது. அதைக் கொண்டு பூமியில் என்ன செய்தாய்' என கேட்கப்படும்.
'பணத்தை பல மடங்காக பெருக்கினேன். அதை அப்படியே பூமியிலேயே விட்டு இங்கு வந்தேன். என்னை மீண்டும் அங்கு அனுப்பினால் அனைத்தையும் கொண்டு வருவேன்' என மனிதன் கூறுவான்.
'சரி... மறுமை நாளுக்காக என்ன செய்தாய்' என கேள்வி கேட்கப்படும்.
இதற்கு பதில் அளிக்க முடியாமல் தத்தளிப்பான் அவன். உடனே நரகத்தின் கதவுகள் அவனுக்காக திறக்கும்.
உயிருடன் இருக்கும் வரை தான் பணத்திற்கு மதிப்பு. அதன் பின் அது பலன் தராது. இறந்தபின் நன்மை அடைய விரும்பினால் தர்மம் செய்யுங்கள். அப்போது 'பலவிதங்களில் தர்மம் செய்துள்ளேன்' என தைரியமாக சொல்லலாம்.