விறகுவெட்டியான அகமது வறுமையில் வாடினான். ஆனாலும் பசியால் வாடுவோருக்கு உணவு கொடுப்பான்.
'' நமக்கே சாப்பிட வழியைக் காணோம் இதில் தர்மம் தேவையா'' என மனைவி திட்டினாள். ஒருநாள் காட்டுவழியே துறவி ஒருவரைக் கண்ட விறகுவெட்டி, தன் நிலையைச் சொல்லி வருந்தினான்.
'' நீ ஏழையாக இருப்பது நன்மையே. எப்போது நீ பணக்காரனாக ஆகிறாயோ அப்போது இறப்பாய்'' என்றார்.
அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவன், மறுநாள் காலையில் விறகு வெட்டச் சென்றான். புதரின் மறைவில் கிடந்த பெட்டி ஒன்றில் தங்க நகைகள் நிறைய இருந்தன. தான் பணக்காரனாகி விட்டதை எண்ணி மகிழ்ந்தாலும், துறவி சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை இழக்க அவனுக்கு மனம் வரவில்லை. யோசித்த அவன் நல்ல மனம் கொண்ட நண்பரின் வீட்டிற்கு சென்றான். நடந்ததை விவரித்து விட்டு, ''நான் பணக்காரனாக மாறினால் தானே இறப்பேன். இது மக்களுடைய பணம். அதில் ஏழைகளுக்கு உதவி செய்வேன்'' என்றான்.
துறவி எச்சரித்ததன் நோக்கம் அகமதுவுக்கு இப்போது தான் புரிந்தது.
தர்மவழியில் ஒருவன் செலவு செய்வதற்கும் இறைவனின் கருணையே காரணம். நாளடைவில் அவன் தர்மத்தின் தலைவனாக உயர்ந்து நிற்பான்.

