மன்னர் ஒருவரின் அவையில் இருந்த அமைச்சர் திடீரென இறந்தார். 'இனி இவரைப் போல நல்லவரை எங்கே தேடுவேன்' என வருந்தினார் மன்னர். ''அடக்கமான ஒருவரை அமைச்சராக்க விரும்புகிறேன். அதற்கான பணியில் ஈடுபடப் போகிறேன்'' என அறிவித்தார் மன்னர். பலரும் அடக்கமானவர் போல நடிக்கத் தொடங்கினர்.
ஒருநாள் மீன் வலையை சுமந்தபடி, அரண்மனை வழியாக சென்றார் முல்லா. அந்த நேரத்தில் வெளியே வந்த மன்னர், ''எங்கு செல்கிறீர்கள்'' எனக் கேட்டார். ''மன்னா! மீன் பிடிக்கப் போகிறேன். என்னதான் பணக்காரனாகி விட்டாலும் பழசை மறக்கக் கூடாது அல்லவா. அதனால் மீன் பிடிக்க செல்கிறேன்'' என்றார்.
'ஆஹா... நான் எதிர்பார்த்தபடி அடக்கமான மனிதர் கிடைத்துவிட்டார்' என சந்தோஷப்பட்டார் மன்னர். மறுநாளே அவரை அமைச்சராக்கினார். சிலமாதம் கடந்தது. ஓய்வு நாளில் முல்லா நடந்து போனார். அவரைக் கண்ட மன்னர், ''என்ன மீன் பிடிக்க செல்கிறீரா...'' எனக் கேட்டார். ''மன்னா... மீனைப் பிடித்த பிறகு (அமைச்சரான பின்) வலை தேவை இல்லையே'' எனச் சிரித்தார் முல்லா. பாவம். முல்லா சொன்னது 'அமைச்சர் பதவி' என மன்னர் உணரவில்லை.

