
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. எல்லாரும் மாடமாளிகையில் வசித்தனர். பொன்னும், மணியும் கொட்டிக் கிடந்தது. இப்படி ஆடம்பரம் வாய்ந்த நகரைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆசை வராது?
அந்நகரை கைப்பற்றும் முன் அதன் விபரங்களை அறிய விரும்பினார் பேரரசர். இதற்காக ஒற்றர் ஒருவரை அந்நகருக்கு அனுப்பினார். அங்கு சென்ற அவன், அந்நகரின் செல்வச்செழிப்பைப் பார்த்து அசந்து விட்டான். எங்கும் அரண்மனை போன்ற வீடுகள் தென்பட்டன. மக்கள் வசிக்கும் வீடுகளே இப்படி இருந்தால், மன்னரின் அரண்மனை எப்படி இருக்கும்? என வியந்தான். அதை பார்க்கும் ஆவலில் நகர் முழுவதும் தேடினான். ஆனால் தென்படவில்லை.
ஒரு கட்டத்தில் அருகே இருந்த ஒருவரிடம், ''ஐயா... நான் ஊருக்கு புதிது. இங்கு மன்னரின் அரண்மனை எங்கே இருக்கு'' எனக் கேட்டான்.
அவர் சிரித்தபடியே, ''நல்லா கேட்டீர்கள். மன்னர் மாளிகையின் முன்னால்தான் நிற்கிறீர்கள்'' என சொன்னார்.
பின்னால் திரும்பி பார்த்தபோது அவனுக்கு தலையே சுற்றியது. காரணம் மன்னரின் வீடு மிகவும் சிறியதாக இருந்தது.
ஒற்றர், ''என்ன ஐயா... இங்கு எல்லோம தலைகீழாக உள்ளதே. ஒன்றுமே புரியவில்லை'' என தவித்தான்.
''தம்பி. வீட்டை விடுங்கள். அதோ அங்கே ஒரு மரம் தெரிகிறதா... அங்கு செல்லுங்கள். உண்மை புரியும்'' என்றார்.
அவரும் அங்கு சென்று பார்த்தார். அந்த மரத்தடியில் ஒருவர் படுத்து இருந்தார். அவரிடம், ''ஐயா... பெரியவரே... இங்கு மன்னர் இருக்கிறாரா'' என விசாரித்தார்.
அதற்கு அவர், ''சொல்லுங்கள். நீங்கள் தேடி வந்தது என்னைத்தான். என்ன விஷயம்'' என்றார். ஒற்றர் ஆடிபோய்விட்டான்.
மேலும் அவர், ''மக்கள் மாளிகையில் இருக்க நீங்கள் மட்டும் எளிமையாக இருக்கிறீர்களே'' எனக் கேட்டார். அதற்கு மன்னர், ''மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களை செழிப்புடன் வாழ வைப்பதுமே என் கடமை'' என்றார். அந்த இடத்தை விட்டு உடனே காலி செய்தான் ஒற்றன். நாட்டுக்கு திரும்பியதும் ரோமப்பேரரசர், ''பாக்தாத் நகரை பார்த்தாயா. படையெடுத்துப் போகலாமா'' என ஆவலுடன் கேட்டார்.
அதற்கு ஒற்றர், ''அரசே... நாம் வெற்றி பெறுவது கஷ்டம். மக்களிடம் செல்வாக்கு மிக்க அவரை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது'' என்றான்.

