விரக்தியில் இருந்தான் மாணவன் அப்துல். ஏனென்றால் கட்டுரைப்போட்டியில் அவனுக்கு கிடைத்தது ஆறுதல் பரிசு.
''கவலைப்படாதே... அடுத்த முறை வெற்றி பெறுவாய்'' என்றார் அம்மா.
மறுநாள் வகுப்பிற்குள் அவன் நுழையும் போதே கைதட்டி மாணவர்கள் வரவேற்றனர். காரணம் தெரியாமல் முழித்த அவனுக்கு ஆசிரியர் சாதிக், ''ஒரு வழியா முதல் பரிசை வாங்கிட்டியே அப்துல்'' என்றார்.
''அது வந்து'' என இழுத்தான்.
அப்போது அங்கிருந்த மாலிக் எழுந்து, ''அப்துல்... நேற்று நான் வாங்கிய பரிசும், பாராட்டும் உனக்கு கிடைக்க வேண்டியது. நேத்து கட்டுரை எழுதும் போது நீ தண்ணீர் குடிக்கப் போனாய். அப்போது காற்றடிக்கவே உன் பேப்பர் பறந்து என்னிடம் வந்துச்சு. அதில் முடிவுரை மட்டும் எழுதி நான் கொடுத்து விட்டேன். ஆனால் நீயோ எழுதின பேப்பரைக் காணவில்லை எனச் சொல்ல கூச்சப்பட்டாய். அவசர அவசரமாக எழுதி ஆறுதல் பரிசை வாங்கினாய்.
நீ எழுதியதை நான் எழுதியதாக கொடுத்தேன். இருந்தாலும் மனசு கேட்கவில்லை; என் அப்பா சொல்லும் அறிவுரை நினைவுக்கு வந்ததால் உண்மையை சொல்லிட்டேன்'' என்றான்.
''அது சரி. உன் அப்பா என்ன சொன்னார்''
''இறைவனுக்கு பயப்படு. அவன் நம்மை கண்காணிக்கிறான்''

