ஆயிரக்கணக்கான கால்நடைகளை வைத்திருந்தார் அய்யூப். அதில் குதிரை, கோவேறு கழுதை, ஒட்டகம், காளை, பசு, ஆடு என அனைத்தும் இருந்தன.
பணச்செருக்கு இல்லாமல் ஏழைகளுக்கு உதவினார். இதைக் கண்டு பொறுக்காமல் ஏழையாக்கினான் ஷைத்தான். அப்போதும் அவர் தன் கடமையைச் சரிவர செய்தார்.
கோபம் அடைந்த ஷைத்தான், அவருடைய உடல் எங்கும் புண் ஏற்படச் செய்தான். நாளடைவில் உடல் அழுகி புழுக்கள் நெளிந்தன. அவரது மனைவி ரஹ்மா அருவருப்பு இல்லாமல் கணவருக்கு சேவை செய்தாள். ஆனால் ஊராரோ ''வெளி வேஷமிடும் அய்யூப் தொழுகையை அவன் ஏற்கவில்லை'' என வதந்தியை பரப்பினர்.
ஒரு கட்டத்தில் அவரால் பேச முடியவில்லை. மனதிற்குள், ''என் அதிபதியே... நோயில் இருந்து காப்பாற்று'' என அழுதார். வானவரான ஜிப்ரீல் தோன்றி காலால் தரையில் அடிக்கும்படி சொன்னார். அவ்விதமே செய்ய நீருற்று வந்தது. அதில் குளித்து விட்டு நீரை பருகினார்.
நோய் நீங்கி உடல் பொன்னாக ஜொலித்தது. மீண்டும் வளமான வாழ்வை பெற்றார். இப்படி பொறுமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் தான் இறைத்துாதர் அய்யூப்.

