
மதிய வேளையில் முல்லா தெருவில் நடந்தார். எதிரில் வந்த ஒரு அறிஞர், ''நான் ஊருக்கு புதிது. உணவு விடுதி ஏதாவது அருகே உள்ளதா'' எனக் கேட்டார். ''வாருங்கள். அழைத்துச் செல்கிறேன்'' என்றார்.
விடுதியும் வந்தது. ''இவ்வளவு துாரம் வந்துவிட்டீர்கள். நீங்களும் சாப்பிடலாமா'' எனக் கேட்டார்.
'' சாப்பிட்டா போச்சு'' என உள்ளே நுழைந்தார் முல்லா.
அங்கு 'இன்றைய ஸ்பெஷல் நெய் மீன்' என எழுதி இருந்தது.
முல்லா 'இரண்டு வறுத்த மீன் துண்டு கொடுங்கள்' என்றார்.
சுடச்சுட மீனும் வந்தது. அதில் ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சிறிதாகவும் இருந்தது. உடனே பெரிய துண்டை எடுத்தார் முல்லா.
இதைப் பார்த்த அறிஞர், ''உங்களை சாப்பிடக் கூப்பிட்டவன் நான். அப்படி இருக்கும்போது நான் சொல்வதற்குள் பெரிய மீனை எடுக்கிறீர்களே'' எனக் கேட்டார்.
''நீங்கள் சொல்வது நியாயம் தான். என் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்''
''பெரிய துண்டையே தங்களுக்கு கொடுத்திருப்பேன்'' என்றார் அறிஞர்.
''அதைத் தானே நானும் செய்துள்ளேன்'' எனச் சொல்லி சிறிய மீனைக் கொடுத்தார் முல்லா.

