
சின்ன விஷயத்திற்கும் அஸ்மா கோபப்படுவாள். கணவருடன் சண்டை, அக்கம்பக்கத்தினருடன் பிரச்னை செய்வது அவளின் வழக்கம். தன் மீது தவறு எனத் தெரிந்தாலும், அவளால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மனநல மருத்துவரிடம் சென்றாள்.
''கோபம் வரும் போது ஒரு மூடி அளவு டானிக் குடியுங்கள். அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை விழுங்குங்கள்'' என்றார் மருத்துவர். அவளும் அதன்படியே செய்தாள். நான்கே நாளில் கோபம் மறைந்தது.
மருத்துவரிடம், ''நீங்கள் கொடுத்த மருந்து அற்புதமாக வேலை செய்கிறது. இப்போது கோபத்தை விட்டு விட்டேன்'' என்றாள் மகிழ்ச்சியுடன்.
''மூலிகை நீரைத்தான் கொடுத்தேன். கோபப்படும் போது அதைக் குடித்ததால் மவுனமாக இருந்தீர்கள். இப்போது அதை நீங்கள் அற்புதம் என்கிறீர்கள்'' என்றார் மருத்துவர் சிரிப்புடன். பார்த்தீர்களா... கோபம் வரும் போது மவுனமாக இருந்தால் பிரச்னை வராது.

