ADDED : ஏப் 29, 2026 05:28 PM
ஒருநாள் ஆயிஷா சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது நாயகம் தன் மகள் பாத்திமாவை அழைத்து, அவள் காதருகில் ரகசியம் கூறினார். அதை கேட்ட பாத்திமாவுக்கு கண்ணீர் பெருகியது. நாயகம் மீண்டும் ஒரு ரகசியத்தைச் சொன்னார். அதைக் கேட்டு பாத்திமா சிரித்தார்.
ஆயிஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் ஏன் அழுகை வந்தது. இப்போது ஏன் சிரிப்பு வந்தது என யோசித்தார். ஆனால் காரணத்தைக் கேட்கவில்லை.
சிலநாள் கழிந்த பின் ஆயிஷா, 'அன்று நாயகம் சொன்ன ரகசியம் என்ன? எதற்காக அழுதாய்? எதற்காக பின்னர் சிரித்தாய்?' என பாத்திமாவிடம் கேட்டார்.
ரகசியத்தை வெளிப்படுத்தினார் பாத்திமா. 'அன்று இரண்டு ரகசியங்களை எனக்குச் சொன்னார். முதலில் அவரது மரணகாலம் நெருங்கி விட்டது என்றார். அதைக் கேட்டு அழுதேன். அதன் பின் 'மரணித்த பிறகு நான் சந்திக்க உள்ள நபர்களில் நீயே முதன்மையானவள். சுவனவாசிப் பெண்களுக்கு நீயே தலைவியாக இருப்பாய்' என்றார். இதைக் கேட்டதும் சிரித்தேன்' என்றார்.
