ADDED : ஜூன் 25, 2026 10:54 AM
மக்களிடம் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்த நபிகள் நாயகத்திற்கு எதிரி தொல்லை அதிகரித்தது. எப்போது வேண்டுமானாலும் அவர் கொல்லப்படலாம் என்ற நிலை உருவானது. இதனால் மெக்காவை விட்டு வெளியேறி மெதீனாவில் தஞ்சம் அடைந்தார்.
அங்கேயும் அவரைக் கொல்ல எதிரிகள் திட்டம் தீட்டினர். இந்த நிலையில் வானில் இருந்து, 'துாதரே! இறைவனிடம் இருந்து அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக. இதைச் செய்யவில்லையானால் அவனது கோட்பாடுகளை எடுத்துச் சொன்னவராக மாட்டீர். அவன் உம்மை காப்பாற்றுவான்' என வசனம் இறங்கியது.
எதிரிகளால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்பது இதன் பொருள். அவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கொண்டே இந்த வசனத்தின் சக்தியை அறியலாம்.
ஆம். தாழிடப்படும் வசதியான கதவுகள் இல்லாத குடிசையில் குடியிருந்தார். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற நிலையில் தான் இருந்தார். தினமும் ஐந்து நேரம் பள்ளிவாசலில் தொழுகை செய்தார். அப்போது எதிரிகள் 'நான் ஒரு முஸ்லிம்' என சொல்லிக் கொண்டு வரலாம். அந்தளவிற்கு அனைவரின் பேச்சையும் நம்பினார். 'உள்ளங்களில் உள்ளதை அவன் மட்டுமே அறிவான். நம்மால் வெளிப்படையானதை மட்டுமே அறிய முடியும்' எனக் கூறினார். எளியவரான அவரை எதிரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை.
வெளிப்படை குணம் கொண்ட நாயகம் அறிவித்தபடி இயற்கையாக 63வது வயதில் மரணம் அடைந்தார்.
