ADDED : ஜூலை 02, 2026 10:32 AM
இறந்த ஒருவரின் உடலைச் சுமந்து வந்தனர் சிலர். அவர்கள் வழியில் நாயகத்தை சந்தித்தனர். அவரிடம் இறந்தவருக்காக தொழுகை நடத்த வேண்டும் என வேண்டினர்.
அவர் உடனே, ''இறந்தவர் யாரிடமாவது கடன்பட்டுள்ளாரா'' எனக் கேட்டார்.
''ஆம்'' என்றனர்.
''கடனை அடைக்கும் அளவுக்கு இவருக்கு சொத்து உள்ளதா?'' எனக் கேட்டார்.
''இல்லை''
''அப்படியானால் தொழுகை நடத்த முடியாது'' என்றார்.
அப்போது அலி என்பவர், ''இவரது கடனை நான் ஏற்கிறேன்'' என்றார்.
உடனே தொழுகை நடத்த சம்மதித்தார்.
கடனை ஏற்றுக் கொண்டவரிடம், ''நரகத்தில் இருந்து உன்னை இறைவன் காப்பாற்றுவான். மற்றவரின் கடனை அடைக்க உதவுபவரை மறுமை நாளில் அவன் விடுவிப்பான்'' என்றார்.
பார்த்தீர்களா... கடனால் அவதிப்படுபவருக்கு உதவி செய்தால் நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். அதே நேரம் கடனைச் செலுத்த வாய்ப்பு இருந்தும் சிலர் கொடுப்பது இல்லை. இவர்களுக்கு மறுமைநாளில் மன்னிப்பு கிடைக்காது.
