ADDED : ஜூலை 23, 2026 09:00 AM

சாப்பிடமாட்டேன், ஸ்கூலுக்கு போக மாட்டேன் என சில நேரத்தில் குழந்தைகள் அடம்பிடிப்பர். அப்போது அவர்களுக்கு பிடித்த பிஸ்கட், சாக்லேட், பொம்மை வாங்கித் தருவதாக பெற்றோர் சொல்வார்கள். சொன்னபடி அதை வாங்கி கொடுப்பது நல்லது. ஆனால் சிலர் பேச்சோடு விட்டு விடுவர். அப்படி செய்யக் கூடாது என்கிறார் நபிகள் நாயகம்.
ஒருமுறை அமீர் என்ற சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுடைய தாய் ''இங்கே வா... உனக்கு சாப்பிட என்ன வைத்திருக்கிறேன் தெரியுமா...'' என்றாள். அப்படி சொன்னதும், ''சிறுவனுக்கு சாப்பிட என்ன தரப் போகிறாய்?''எனக் கேட்டார் நாயகம்.
''பேரீச்சம்பழம் தரப் போகிறேன்'' என்றாள்.
''கொடுப்பதாக சொன்னதை அவசியம் கொடுங்கள். இல்லாவிட்டால் உங்களின் கணக்கில் ஒரு பொய் எழுதப்பட்டு விடும்'' என்றார். வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுபவரே உயர்ந்த மனிதர்.
