ADDED : ஆக 20, 2026 11:43 AM
இறைவனின் துாதர்களான நபிமார்கள் அவ்வப்போது மனித குலத்திற்கு நல்வழி காட்ட மண்ணிற்கு வந்தனர். அவர்களில் 'ஹஜ்ரத் ஈஸா'விற்கு பின்னர் 600 ஆண்டுகளாகியும், எந்த நபியையும் அவன் அனுப்பவில்லை.
இதனால் மக்கள் பாவச் செயல்களில் ஈடுபட்டனர். அதிலும் அரேபியர்கள் விளையாட்டிற்காக சக மனிதர்களை கொல்வது, போராட்ட குணத்துடன் செயல்படுவது, மது குடிப்பது, பெண் குழந்தையை உயிருடன் புதைப்பது என கொடிய பாவங்களைச் செய்தனர்.
இத்தகைய சூழலில் தான் நபிகள் நாயகம் 570 ஆகஸ்ட் 12ல் மெக்காவில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாயின் பெயர் ஹஜ்ரத் ஆமினா. இவர் பிறப்பதற்கு முன்பாக தந்தையும், ஆறாவது வயதில் தாயும் மறைந்தனர்.
எட்டு வயது வரை பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப் பொறுப்பிலும், பின்னர் சிறிய தந்தையரான ஹஜ்ரத் அபூதாலிப் பொறுப்பிலும் வாழ்ந்தார். மக்களிடையே செல்வாக்காக இருந்த இவரை, 'அல் அமீன்'(நம்பிக்கையாளர்), 'அஸ் சாதிக்' (உண்மையாளர்) என்றும் பாராட்டினர்.
