PUBLISHED ON : மே 21, 2026 12:00 AM

'எங்கள் தலைவரை பிடிக்காதவர்கள், இப்படி பொய் தகவலை பரப்புகின்றனர்; யாரும் இதை நம்ப வேண்டாம்...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி குறித்து, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2023ல் நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் யாராவது ஒருவர் முதல்வராக பதவியேற்பார் என கூறப்பட்டது.
ஆனால், அதிக அரசியல் அனுபவம் இல்லாத ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் பதவியை கொடுத்தது, காங்கிரஸ் மேலிடம். இதனால், காங்., மூத்த தலைவர்கள் பலர், இன்னும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., அரவிந்த் சமீபத்தில் கூறுகையில், 'மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் வலதுகரமாக இருந்த சுவேந்து அதிகாரி, பின், பா.ஜ.,வில் இணைந்து, தற்போது முதல்வராகி விட்டார். மம்தாவின் விசுவாசியை வைத்தே, மம்தாவை வீழ்த்தி விட்டோம்.
'அதேபோல், ரேவந்த் ரெட்டியும் விரைவில் பா.ஜ.,வில் ஐக்கியமாகி விடுவார். அவரை வைத்தே, தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சியை அமைப்போம்...' என்றார்.
அரவிந்தின் இந்த பேச்சு, தெலுங்கானா அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது . ரேவந்த் ரெட்டியோ, 'பா.ஜ., - எம்.பி., அரவிந்திற்கு, என் மீது என்ன கோபம் என தெரியவில்லையே...' என புலம்புகிறார்.
