PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM

'இனி அவருக்கு எந்த கவலையும் இல்லை. நினைத்ததை சாதித்து விட்டார்...' என, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
மஹாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் சுஷில்குமார் ஷிண்டே. காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவர். இங்குள்ள சோலாப்பூர் தான், இவரது சொந்த ஊர். ஆனால், 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில் சோலாப்பூர் தொகுதியில் இவரால் வெற்றி பெற முடியவில்லை. பா.ஜ., வேட்பாளர்களிடம் இரண்டு தேர்தல்களிலும் தோல்வி அடைந்தார்.
'தீவிர அரசியலில் இருந்து வெற்றியுடன் விலகலாம் என நினைத்தால், இப்படி தோல்வி பட்டியல் வரிசை கட்டுகிறதே... இந்த தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும்...' என, சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டார், ஷிண்டே.
ஆனால், வயது மூப்பு காரணமாக, அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால், தனக்கு பதிலாக, தன் மகள் பிரணிதியை சோலாப்பூரில் நிறுத்தினார், ஷிண்டே. அதிர்ஷ்டவசமாக இந்த தேர்தலில் பா.ஜ., வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி வாகை சூடினார், பிரணிதி.
இதனால், 'என் சபதத்தை என் மகள் நிறைவேற்றி விட்டாள். தந்தையின் கவுரவத்தை காப்பாற்றி விட்டாள்...' என, நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், ஷிண்டே.