PUBLISHED ON : ஏப் 02, 2024 12:00 AM

'நாம் எவ்வளவு தான் சிரமப்பட்டு பிரசாரம் செய்தாலும், இந்த ஒரு விஷயத்தில் எல்லாம் அடிபட்டு போகிறதே...' என கவலைப்படுகின்றனர், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.
இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினர், 'பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தலித் சமூக மக்களின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் இலக்கு...' என, பிரசாரம் செய்கின்றனர். 'இந்த மூன்று சமூகத்தினரும் எங்கள் குடும்பத்தினர்...' என, வீடு வீடாக பிரசாரம் செய்கின்றனர்.
உ.பி.,யில் இந்த மூன்று சமூகத்தினரும் அதிக அளவில் இருப்பதால், அவர்களது ஓட்டுகளை பெற்று விடலாம் என்பது, இவர்களது நினைப்பு.
இவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 'சமாஜ்வாதியும், காங்கிரசும் வாரிசு கட்சிகள். அவர்களது குடும்பத்தை வளப்படுத்துவதற்காகவே அரசியல் செய்கின்றனர். மற்ற யாரைப் பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை...' என, அதிரடியாக பிரசாரம் செய்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத காங்., மற்றும் சமாஜ்வாதி நிர்வாகிகள், 'நம் கட்சிகளில் வாரிசு அரசியல் இருப்பது உண்மை தானே. இதை, இல்லை என மக்களிடம் எப்படி கூற முடியும்...' என புலம்புகின்றனர்.

