PUBLISHED ON : மே 14, 2024 12:00 AM

'ஓட்டு எண்ணி முடிவு தெரிவதற்குள் எங்கள்தலையே வெடித்து விடும் போலிருக்கிறது. 'சஸ்பென்ஸ்' தாங்க முடியவில்லை...' என்கின்றனர், மஹாராஷ்டிரா மாநில மக்கள்.
இங்கு சிவசேனாவை சேர்ந்த, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, பா.ஜ., கூட்டணியில் இணைந்து, தற்போது துணை முதல்வராக பதவி வகிக்கிறார், அவரது அண்ணன் மகன் அஜித் பவார்.
இங்குள்ள பாரமதி தான், அஜித் பவார் மூதாதையர் வசித்த இடம். இந்த லோக்சபா தொகுதியில் எப்போதுமே சரத் பவார் குடும்பத்தினர் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு தேர்தல்களாக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, தொடர்ச்சியாக இங்கு வெற்றி பெற்றார்.
தற்போது கட்சி உடைந்துள்ளதால், சரத் பவார் தரப்பில் சுப்ரியா சுலேயும், அஜித் பவார் தரப்பில், அவரது மனைவி சுனித்ராவும், பாரமதியில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தொகுதியை கைப்பற்றுவது சரத் பவார், அஜித் பவார் என இருவருக்குமே கவுரவ பிரச்னை. இதனால், இரண்டு தரப்புமே இங்கு பிரசாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தின.
ஒரு வழியாக இங்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. அஜித் பவார் செய்த துரோகம் காரணமாக மக்களிடம் உள்ள அனுதாப அலை, தன்னை கரை சேர்த்து விடும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார், சுப்ரியா சுலே. மாநில மக்கள், இந்த தொகுதியின் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

