PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

'வழக்கமான தேர்தல் வியூகங்களை பார்த்து சலித்துப் போன எங்களுக்கு, இது, சந்தோஷமாகத் தான் இருக்கிறது...' என்கின்றனர், மஹாராஷ்டிரா வாக்காளர்கள்.
இங்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆளும் கூட்டணியில் உள்ள இந்த கட்சிகளில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும், அவற்றின் தாய் கட்சிகளில் இருந்து பிரிந்து வந்தவை.
ஏக்நாத் ஷிண்டே வுக்கும், அஜித் பவாருக்கும் அவர்களது கட்சியின் பெயர், சின்னங்களை பயன்படுத்த தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தாலும், உத்தவ் தாக்கரேயும், சரத் பவாரும் தான், அந்த கட்சிகளின் உண்மையான தலைவர்கள் என்ற கருத்து நிலவுகிறது.
இதனால், லோக்சபா தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏக்நாத் ஷிண்டேயும், அஜித் பவாரும் உள்ளனர். வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி உள்ளனர்.
புனே, கோலாபூர், சாங்கிலி போன்ற பகுதிகளில் மல்யுத்த விளையாட்டு மிகவும் பிரபலம். இதனால், அந்த விளையாட்டில் பிரபலமான வீரர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்து, சில தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர், ஏக்நாத்தும், அஜித் பவாரும்.
இவர்களுக்கு போட்டியாக, உத்தவ் தரப்பும், பா.ஜ., மேலிடமும் சில மல்யுத்த வீரர்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளன.
'இது எங்களுக்கு தேர்தல் போல் தெரியவில்லை. மல்யுத்த போட்டியாகவே தெரிகிறது...' என்கின்றனர், மஹாராஷ்டிரா மக்கள்.