PUBLISHED ON : ஜூலை 01, 2026 12:10 AM

'எதிர்க்கட்சியே இல்லை; என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற மிதப்பில் இருந்த தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு, இடியாக வந்து இறங்கி இருக்கிறார் கவிதா...' என்கின்றனர், அம்மாநில மக்கள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி, 2020ல், பாரத் ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றப்பட்ட நிலையில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. அந்த கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்களும், நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டம் பிடித்தனர்.
இதனால், 'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எனக்கு எதிரிகளே இல்லை...' என அடிக்கடி கூறி வந்தார், ரேவந்த் ரெட்டி. இந்த நிலையில் தான், சந்திரசேகர ராவின் மகள் கவிதா, சில மாதங்களுக்கு முன் தெலுங்கானா ரக் ஷன சேனா என்ற கட்சியை துவக்கினார். அரசின் புதிய அறிவிப்புகள், திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் பேட்டியளித்த கவிதா, 'கடந்த சட்டசபை தேர்தலில் ரேவந்த் ரெட்டி மோசடியாக வெற்றி பெற்றுள்ளார். அவரது கூடங்கல் தொகுதியில், 23,000 போலி வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இவர்களது ஓட்டுகளை பெற்றுதான் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து, தேர்தல் கமிஷன் முறையாக விசாரணை நடத்த வேண்டும்...' என்றார்.
கவிதாவின் இந்த ஆவேசத்தை பார்த்த ரேவந்த் ரெட்டி, 'புதிதாக முளைத்துள்ள எதிரி பெரிய குடைச்சல் கொடுக்கிறாரே...' என புலம்புகிறார்.
