PUBLISHED ON : ஜூன் 27, 2026 12:00 AM

'பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் விமர்சிக்கின்றனரே...' என புலம்புகிறார், கர்நாடக காங்., அரசின் முதல்வர் சிவகுமார்.
கர்நாடகாவில், 2023ல் காங்., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முதல்வர் பதவியை கைப்பற்ற சிவகுமார் முட்டி மோதினார். ஆயினும், மற்றொரு மூத்த தலைவரான சித்தராமையா முதல்வராகி விட்டார். மூன்று ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் சித்தராமையா பதவி விலக, சிவகுமார் முதல்வர் பதவியில் அமர்ந்தார்.
ஆயினும், நிர்வாக ரீதியான சிக்கலுக்கு தீர்வு காண்பதை விட, உட்கட்சி பூசலுக்கு தீர்வு காண்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிட வேண்டியிருப்பதாக சிவகுமார் புலம்புகிறார்.
சிவகுமார் தலைமையிலான அரசில் தற்போது, 13 அமைச்சர்களே உள்ளனர். அமைச்சரவையில் இன்னும் 20 இடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. பதவியேற்று 25 நாட்களாகியும், அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் முதல்வரால் சுமுகமான முடிவை எட்ட முடியவில்லை.
காங்கிரசில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றனர். ஒருவரை விட்டு மற்றவருக்கு பதவி கொடுத்தால் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என சிவகுமார் அஞ்சுகிறார்.
பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ, 'அரசியலிலும், நிர்வாகத்திலும் சிவகுமாரை புலி என்று காங்கிரசார் புகழ்ந்தனர். ஆனால், புலி பதுங்கி கடைசியில் படுத்தே விட்டதே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
சிவகுமார் ஆதரவாளர்களோ, 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றனரே...' என புலம்புகின்றனர்.
