PUBLISHED ON : ஜூன் 28, 2026 12:00 AM

யாருக்கு பதவி பறிபோகும், யாருக்கு கிடைக்கும் என்ற உச்சக்கட்ட பரபரப்பும், எதிர்பார்ப்பும் மத்திய அமைச்சர்களிடையே நிலவுகிறது. 'இன்னும் சில நாட்களில் இதற்கு பதில் கிடைத்து விடும்...' என, டில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஜனாதிபதி திரவுபதி முர்முவை அடுத்தடுத்து சந்தித்து பேசியது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி, தன் அமைச்சரவையை அடிக்கடி மாற்ற மாட்டார். பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் மீது, சமீபகாலமாகவே தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
'மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று, அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனால், அமைச்சரவையை மாற்றும் முடிவுக்கு பிரதமர் மோடி வந்திருப்பதாகவும், இந்த மாற்றத்தில் தர்மேந்திர பிரதானின் பதவி காலியாவது உறுதி என்றும் பேசப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதில் இருந்து, மத்திய அமைச்சர்கள் பலரும் பதவியை தக்கவைப்பதற்காக கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர்.
