PUBLISHED ON : பிப் 01, 2025 12:00 AM

'அரசியல் கட்சி தலைவராக இருப்பது எவ்வளவு பெரிய சிரமமான வேலை தெரியுமா...?' என புலம்புகிறார், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மஹாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார்.
தேசியவாத காங்., கட்சியின் நிறுவனரான சரத் பவாரிடம் இருந்து, கட்சி தன் கைக்கு வந்ததை அடுத்து, 'இனி மஹாராஷ்டிர அரசியலில் என்னை யாரும் அசைக்க முடியாது...' என, வீராப்பாக பேசி வந்தார், அஜித் பவார்.
ஆனால், அரசியல் களம் அவர் நினைத்தது போல் அவ்வளவு எளிதாக இல்லை. மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது.
அதே நேரத்தில், தன் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அவரால் அமைச்சர் பதவி வாங்கித் தர முடியவில்லை. இந்த விஷயத்தில் பெரிதும் ஏமாற்றம் அடைந்தது, தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், அஜித் பவாரின் தீவிர விசுவாசியுமான சக்கன் புஜ்பால்.
இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், அஜித் பவாரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார். கட்சியின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதும் இல்லை. யார் யாரையோ துாது விட்டு பார்த்தும், புஜ்பால் சமாதானம் அடையவில்லை.
'கூட்டணி அரசில் சமரசம் செய்ய வேண்டும் என்பது நியாயம்தான். ஆனால், அஜித் பவார், தனக்கு மட்டும் துணை முதல்வர் பதவியை வாங்கி விட்டார். எங்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்...' என கொதிக்கிறார், புஜ்பால்.
'எப்படி சிக்கியிருக்கிறேன் பார்த்தீர்களா...' என கண்ணீர் வடிக்கிறார், அஜித் பவார்.