PUBLISHED ON : ஏப் 12, 2026 02:02 AM

'நேரம் பார்த்து, சரியாக காய் நகர்த்தியுள்ளனர். இனி, நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்...' என, காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு குறித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சி நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் பேசுகின்றனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆளும் அரசில் துணை முதல்வராக பதவி வகித்த, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார், சில மாதங்களுக்கு முன் நடந்த விமான விபத்தில் பலியானார்.
இதையடுத்து, அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், துணை முதல்வராக பதவியேற்றார். அஜித் பவார் இறந்ததால் காலியான பாரமதி சட்டசபை தொகுதிக்கு, வரும், 23ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், சுனேத்ரா பவார், ஆளும் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், திடீரென தன் வேட்பாளரை வாபஸ் வாங்கியுள்ளது, காங்கிரஸ் மேலிடம். இதனால், சுனேத்ரா பவார், போட்டியின்றி எம்.எல்.ஏ.,வாக தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
'எதிர்காலத்தில் தேசியவாத காங்கிரசை, தங்கள் பக்கம் இழுப்பதற்காகவே, சுனேத்ராவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாமல், காங்கிரஸ் பின்வாங்கியுள்ளது. இனி, சுனேத்ராவையும், அவரது கட்சியினரையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்; இது, காங்கிரசின் ராஜதந்திர நடவடிக்கை தான்...' என்கின்றனர், பா.ஜ.,வினர்.
