PUBLISHED ON : பிப் 16, 2026 03:04 AM

'தேர்தல் நெருங்கும் நேரத்தில், எதற்கு இவரை உள்ளே இழுத்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்...' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூரைப் பற்றி கூறுகின்றனர், கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவரது தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தவர், சசி தரூர். காங்கிரசின் அறிவுஜீவி அடையாளத்துடன் வலம் வந்த இவரிடம், கட்சியின் சாதாரண தொண்டர்கள், அவ்வளவாக நெருக்கம் காட்டுவது இல்லை.
கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சசி தரூர், சமீப காலமாக மத்தியில் உள்ள, பா.ஜ., ஆட்சியையும், பிரதமர் மோடியையும் பாராட்டி பேசி வந்தார். இதனால், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
'சசி தரூரை கட்சியை விட்டு நீக்க வேண்டும்...' என, கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கினர். இந்த நிலையில் தான், கேரளாவில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, காங்கிரஸ் பிரசாரக் குழுவின் இணை தலைவராக சசி தரூரை நியமித்துள்ளது, அந்த கட்சி மேலிடம்.
இது, கேரள காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'கட்சி மேலிட தலைவர்களின் அறிவுரையை ஏற்காமல், தொடர்ந்து எதிர்க்கட்சியினரை பாராட்டி பேசி வந்த சசி தரூருக்கு, திடீரென முக்கிய பொறுப்பு கொடுத்ததை ஏற்க முடியவில்லை. அவருடன், மற்ற நிர்வாகிகள் எப்படி இணைந்து வேலை பார்ப்பர்...' என கொதிக்கின்றனர், தொண்டர்கள்.

