PUBLISHED ON : பிப் 13, 2026 12:23 AM

'இவருக்காக தனியாக பயிற்சி எடுக்க வேண்டும் போலிருக்கிறது...' என, தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் பற்றி கூறுகின்றனர், அந்த மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், பாரத் ராஷ்ட்ர சமிதியின் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தார்.
அவரது பதவிக்காலத்தில், எதிர்க்கட்சி தலைவர் களின் தொலைபேசி உரையாடல்கள் சட்டவிரோதமாக ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. ரேவந்த் ரெட்டி முதல்வரானதும், இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார்.
வழக்கமாக, இதுபோன்ற புலனாய்வு குழுக்கள் பெரிதாக எந்தவிதமான விசாரணையும் நடத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், இந்த புலனாய்வு குழுவினர், கடந்த சில வாரங்களாக, சந்திரசேகர ராவிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு, சந்திரசேகர ராவ் தரப்பில் இருந்து, பெரிய அளவில் எந்தவிதமான ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. எந்த கேள்வி கேட்டாலும், 'எனக்கு வயதாகி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்கள் சரியாக ஞாபகம் இல்லை. எதுவுமே நினைவில் இல்லை...' என, கிளிப்பிள்ளை போல், திரும்ப திரும்ப சொல்கிறார், சந்திரசேகர ராவ்.
புலனாய்வு குழுவினரோ, 'இப்பவே கண்ணை கட்டுதே...' என, புலம்புகின்றனர்.

