PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

'இவரது அரசியல் அக்கப் போருக்கு முடிவே இல்லையா...?' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும், அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான தேஜ் பிரதாப் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த கட்சி நிர்வாகிகள்.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு வயதாகி விட்டதால், தன் இளைய மகன் தேஜஸ்வி யாதவிடம், கட்சியை வழிநடத்தும் பொறுப்பை கொடுத்துள்ளார்.
மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப்பும் கட்சியில் முக்கிய பொறுப்பில் தான் இருந்தார்; ஆனால், அவரது நடத்தை மோசமாக இருந்ததால், அதிரடியாக அவரை கட்சியை விட்டு நீக்கினார், லாலு.
ஆனாலும், தேஜ் பிரதாப் தொடர்ந்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவின் குடும்பத்தில் தான், தேஜ் பிரதாபின் சகோதரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
கட்சியிலிருந்து, தான் நீக்கப்பட்டது குறித்து, அகிலேஷ் யாதவிடம் முறையிடுவதற்காக, தொடர்ச்சியாக அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு நச்சரித்துள்ளார், தேஜ் பிரதாப். இதனால் எரிச்சலடைந்த அகிலேஷ், தேஜ் பிரதாபின் மொபைல் போன் எண்ணை, 'பிளாக்' செய்து விட்டார்.
கடுப்பான தேஜ் பிரதாப், அகிலேஷை தொடர்ந்து வசைபாடி வருகிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரோ, 'குடும்ப சண்டை, அரசியல் சண்டையாக மாறி விட்டதே...' என, புலம்புகின்றனர்.