PUBLISHED ON : பிப் 05, 2026 04:14 AM

'இவரால் நமக்கு நன்றாக பொழுது போகிறது...' என, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் குறித்து கிண்டல் அடிக்கின்றனர், தெலுங்கானா மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கே.டி.ராமாராவின் தந்தையும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் உள்ளிட்ட அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரேவந்த் ரெட்டி முதல்வரானதும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார். இந்த குழுவினர் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமாராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
அடுத்த கட்டமாக, சந்திரசேகர ராவும், ராமாராவும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ராமாராவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், 'இந்த வழக்கில் நான் சிறைக்கு சென்றாலும் மகிழ்ச்சி தான். சமீபகாலமாக என் உடல் எடை அதிகரித்து விட்டது. சிறைக்கு சென்றால், யோகா பயிற்சி செய்து, எடையை குறைக்க நேரம் கிடைக்கும். அதனால், சிறைவாசத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்...' என்றார்.
தெலுங்கானா மக்களோ, 'சிறையில் நான்கு நாட்கள் களி தின்றாலே உடல் எடை குறைந்து விடும்; யோகா செய்ய வேண்டிய தேவையே இருக்காதே...' எனக் கூறி, சிரிக்கின்றனர்.

