PUBLISHED ON : ஏப் 08, 2026 02:23 AM

'இருவருக்கும் இடையே நடக்கும் வார்த்தை போரை வைத்து, ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கிறது...' என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பற்றி பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது; ஆனால், அதற்குள் அரசியல் கட்சி தலைவர்களின் மோதல் துவங்கி விட்டது.
உ.பி.,யில் உள்ள நொய்டா நகரம், தகவல் தொழில்நுட்ப துறையின் மையமாக விளங்கி வருகிறது. இங்கு, சமீபத்தில் சர்வதேச விமான நிலைய திறப்பு விழா நடந்தது.
இதில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 'ஒன்பது ஆண்டுகளுக்கு முன், உ.பி.,யின் அப்போதைய முதல்வரான அகிலேஷ் யாதவ், நொய்டாவை, தங்கள் பாக்கெட்டை நிரப்பும், ஏ.டி.எம்., ஆக மட்டும் பயன்படுத்தி வந்தார்.
'அங்கிருந்து கிடைக்கும் வருவாயை, தன் கட்சிக்கும், குடும்பத்துக்கும் பயன்படுத்தினார். ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், நொய்டாவை, சர்வதேச தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்றினோம்...' என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த அகிலேஷ், 'அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோற்பது உறுதி. முதல்வர் பதவியில் இருந்து வெளியேறப் போகும் ஆதித்யநாத்துக்கு, நான் சாபம் விடுக்க விரும்பவில்லை...' என, கிண்டல் அடித்தார்.
உ.பி., மக்களோ, 'தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே பிரசாரத்தில் அனல் பறக்கிறதே...' என ஆச்சரியப்படுகின்றனர்.

