PUBLISHED ON : ஜூலை 22, 2026 12:00 AM

'காங்கிரஸ் கட்சியையும், கோஷ்டிப் பூசலையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது...' என கிண்டல் அடிக்கின்றனர், ஹரியானா மாநில மக்கள்.
முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் ஹரியானாவில், தொடர்ந்து 12 ஆண்டுகளாக பா.ஜ.,வே ஆளும் கட்சியாக உள்ளது.
இங்கு அசைக்க முடியாத செல்வாக்குடன் திகழ்ந்த காங்கிரஸ், இழந்த செல்வாக்கை மீட்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் சண்டிகரில் நடந்தது.
இதில், முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் சஞ்சய் தத், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனித்தனி கோஷ்டியாக செயல்படும் பூபிந்தர் சிங் ஹூடாவும், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் அருகருகே அமராமல், சற்று தள்ளி அமர்ந்திருந்தனர்.
அப்போது திடீரென எழுந்த பூபிந்தர் சிங் ஹூடா, சுர்ஜேவாலாவிடம் சென்று, 'எனக்கு ஆதரவு தாருங்கள்; ஹரியானாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம்...' என்றார்.
சுர்ஜேவாலாவோ, 'பல ஆண்டுகளாக தொடர்ந்து உங்களுக்கு ஆதரவு அளித்து விட்டேன். இனிமேல், நீங்கள் தான் எனக்கு ஆதரவு தர வேண்டும்...' என்றார்.
இதைப் பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகள், 'இவர்கள் கோஷ்டிப் பூசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. அடுத்த தேர்தலிலும் நாம் ஆட்சி அமைப்பது சிரமம் தான்...' என புலம்பினர்.
