PUBLISHED ON : மே 22, 2026 12:20 AM

'அரசியல்வாதிகளில் இவர் ரொம்பவே வித்தியாசமானவராகத் தான் இருக்கிறார்...' என, ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பஜன்லால் சர்மா பற்றி புலம்புகின்றனர், அம்மாநில அதிகாரிகள்.
ராஜஸ்தானில், கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதும், அந்த கட்சியின் மூத்த தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா தான் முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், புதுமுகமான பஜன்லால் சர்மா முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால், அவரால் திறம்பட ஆட்சி செய்ய முடியுமா என, பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், இதுவரை பெரிய அளவில் பிரச்னை ஏதும் இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறார், பஜன்லால் சர்மா.
சமீபகாலமாக, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலகத்தில், இரவு நேரங்களில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார், சர்மா. சில நேரங்களில் அதிகாலை வரை கூட, ஆலோசனை கூட்டங்கள் நீடிக்கின்றன. இந்த அனுபவம், அதிகாரிகளுக்கு அவதியை தருகிறது.
அத்துடன், கடந்த சில நாட்களாக, மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்துக்கு செல்லும் முதல்வர் சர்மா, இரவில் அங்கு தங்குகிறார். அந்த நேரத்தில், கிராமத்தில் உள்ள மக்களை அழைத்து அவர்களிடம் குறைகளை கேட்டு, அவற்றை நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.
'இப்படியே போனால், தலைமைச் செயலகமே இரவில் தான் செயல்படும் போலிருக்கிறது. இனி, ஒவ்வொரு இரவும் நமக்கு ஏகாதசி தான்...' என அதிகாரிகள் புலம்புகின்றனர்.
