PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM

'அடிப்படையில் அதிகாரியாக இருந்தாலும், அரசியல்வாதிகளுக்கு உரிய எல்லா அம்சங்களையும் கற்று தேர்ந்து விட்டார்...' என, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் குறித்து பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர்; அங்கு, பல மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றி பாராட்டு பெற்றவர்.
இவரை அரசியலுக்கு இழுத்து வந்தவர், பிரதமர் மோடி. தற்போது இவர், மத்திய அரசில் தவிர்க்க முடியாத அமைச்சர். ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் அமைச்சராக உள்ளார்.
சமீபகாலமாக, வாரந்தோறும் மத்திய அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, பத்திரிகையாளர்களுக்கு விளக்கும் பணியும் இவருக்கு தரப்பட்டுள்ளது.
இங்கு, வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பை போல் இல்லாமல், டிஜிட்டல் திரையில் அமைச்சரவையின் முடிவுகள் குறித்த தகவல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதை ஒவ்வொரு அம்சமாக பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் போல் பத்திரிகையாளர்களுக்கு விளக்குகிறார், வைஷ்ணவ்.
இந்த சந்திப்பு முடிந்ததும், அறுசுவை விருந்தும் உண்டு. ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான உணவு வகைகள் பத்திரிகையாளர்களுக்கு சுடச் சுடவும், சுவையாகவும் பரிமாறப்படுகின்றன.
இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'பத்திரிகையாளர்களுக்கு அமைச்சரவை முடிவுகளை விளக்குவது மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்டைலில் இருந்தால் போதுமா... விருந்தோம்பலும் அதுபோல் பிரமாண்டமாக இருக்க வேண்டாமா...?' என, சிரித்தபடியே கூறுகிறார் அஸ்வினி வைஷ்ணவ்.

