PUBLISHED ON : பிப் 12, 2026 01:04 AM

'நீதிமன்றத்தில் அசத்தியவர், பார்லிமென்டில் மவுனமாக இருப்பது ஏன்...?' என, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், ராஜ்யசபா நியமன எம்.பி.,யுமான ரஞ்சன் கோகோய் பற்றி கூறுகின்றனர், சக எம்.பி.,க்கள்.
ரஞ்சன் கோகோய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, பல முக்கிய வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கினார். பல வழக்குகளில், தான் கூற வந்த கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக தெரிவித்து, அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை பெற்றவர்.
தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அவருக்கு ராஜ்யசபா நியமன எம்.பி., பதவியை வழங்கியது, பா.ஜ., மத்திய அரசு. நியமன எம்.பி.,யின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். விரைவில், ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
ரஞ்சன் கோகோய், எம்.பி.,யாக பதவி வகித்த ஆறு ஆண்டுகளில், ஒரே ஒரு முறை மட்டும் பார்லி மென்டில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசியுள்ளார்.
அதேபோல், அவரது பதவிக்காலத்தில், 50 சதவீத நாட்கள் மட்டுமே பார்லிமென்டிற்கு வந்திருந்தார். டில்லியில், அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தும், பார்லிமென்டிற்கு வருவதை தவிர்த்து விடுகிறார்.
இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.,க்கள் சிலர் கூறுகையில், 'சிங்கம், காட்டுக்கு வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம்; ஊருக்குள் வந்தால் விபரீதமாகி விடுமே...' என, ரஞ்சன் கோகோய் பற்றி நகைச்சுவையாக பேசுகின்றனர்.

