PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

'சாதாரணமாக கூறியதை இவ்வளவு பெரிதுபடுத்தி விட்டனரே...' என புலம்புகின்றனர், டில்லியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பற்றி அவதுாறாக பேசியதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
தற்போது, இந்த வழக்கு விவகாரத்தில் ராகுலின் தாயாரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியாவும் சிக்கியுள்ளார். சமீபத்தில் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியபோது, ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இதுகுறித்து பார்லிமென்டிற்கு வெளியில் பேட்டியளித்த சோனியா, 'படித்ததையே திரும்ப திரும்ப படித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு சோர்வடைந்து விட்டார்; பாவம்...' என்றார்.
இந்த விஷயத்தை வசமாக பிடித்துக் கொண்ட பா.ஜ.,வினர், சோனியாவை காய்ச்சி எடுத்து விட்டனர். 'பழங்குடியினத்தை சேர்ந்த ஜனாதிபதியை, சோனியா அவமதித்து விட்டார்; இது, காங்கிரஸ் குடும்பத்தினரின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது...' என, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
இதற்கு ஒரு படி மேலே சென்று, மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில், சோனியாவுக்கு எதிராக சிலர், புகாரும் அளித்து விட்டனர்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், 'எதார்த்தமாக சோனியா பேசியதை, பா.ஜ.,வினர் திரித்து கூறி அரசியலாக்கி விட்டனர். நாங்கள் வாயை திறந்தாலே வழக்கு போடுவது நியாயமா...?' என, எரிச்சலுடன் கூறுகின்றனர்.