/
தினம் தினம்
/
அக்கம் பக்கம்
/
இந்த முறையும் எதிர்க்கட்சி தானா?
/
இந்த முறையும் எதிர்க்கட்சி தானா?
PUBLISHED ON : பிப் 02, 2026 01:17 AM

'இந்த முறையாவது ஆட்சியை பிடித்து விடலாம் என நினைத்தால், அதற்கு வாய்ப்பு குறைவா இருக்கும் போலிருக்கிறதே...' என, கவலைப்படுகிறார், கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான வி.டி.சதீஷன்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு தொடர்ச்சியாக இரண்டு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், வரும் ஏப்ர லில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதில், இடதுசாரி கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.
எதிர்க்கட்சியான காங்கிரசும், இந்த முறை வாய்ப்பை தவற விட்டு விடக் கூடாது என்பதற்காக, களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகிறது. சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.
இதில் தேர்வான பிரதிநிதிகளுக்காக, அந்த மாநிலத்தின் கொச்சி நகரில் பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்றார். கூட்டத்தில் ராகுல் என்ன பேச போகிறார் என கேட்க, காங்., நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர்.
ஆனால் ராகுலோ, தங்கள் பெற்றோருடன் வந்திருந்த சிறுவர்களுடன், 'செல்பி' எடுப்பது, அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பதில், 'பிசி'யாக இருந்தார். இதைப் பார்த்த, கேரள எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷன் உள்ளிட்ட காங்., நிர்வாகிகள், 'இந்த முறையும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டியது தானா...' என, புலம்பினர்.

