PUBLISHED ON : மார் 28, 2026 03:33 AM

'தேர்தல் தோல்விகள் தான் தொடர்கிறது என்றால், சகுனமும் சரியில்லையே...' என, கவலைப்படு கின்றனர், கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏப்ரல் 9ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
டில்லி, அக்பர் சாலையில், 1978 முதல் காங்கிரசின் அடையாளமாக திகழும் கட்சி அலுவலகத்தை காலி செய்யும்படி, அக்கட்சி மேலிடத்துக்கு, மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம், டில்லி கோட்லா மார்க் பகுதிக்கு மாற்றப்பட்டு, ஓராண்டு கடந்த பின்னும், அக்பர் சாலையில் உள்ள அலுவலகத்தையும் காங்கிரஸ் ஆக்கிரமித்துள்ளதால், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்ததாக, கேரளாவில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பிரசாரத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது தாயாரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; இதனால், ராகுலின் பிரசாரமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், அடி மேல் அடி விழுவதால் கலக்கம் அடைந்துள்ள கேரள காங்கிரஸ் நிர்வாகிகள், 'இந்த முறையும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர வேண்டுமோ...?' என, புலம்புகின்றனர்.
