PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM

'எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' உள்ளிட்ட மத்திய அரசின் பல நடவடிக்கைகளுக்கும், திட்டங்களுக்கும், காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான சசி தரூர் தொடர்ந்து ஆதரவாக பேசி வருகிறார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறுவதற்காக சென்றுள்ள எம்.பி.,க்கள் குழுவில், தங்கள் ஒப்புதல் இல்லாமலேயே சசி தரூரை மத்திய அரசு அனுப்பி வைத்ததற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த குழுவுக்காக, காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில், மூத்த எம்.பி.,யான ஆனந்த் ஷர்மாவின் பெயரும் இருந்தது; அவரையும் மத்திய அரசு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சமீபத்தில் இது குறித்து பேசிய ஆனந்த் ஷர்மா, 'மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். காங்கிரஸ் சார்பில் இதற்கு முன் பிரதமர்களாக இருந்த இந்திரா, மன்மோகன் சிங் போன்ற தலைவர்கள், தேச பாதுகாப்புக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டபோது, இது போன்ற குழுக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
'தற்போதைய பா.ஜ., அரசும் அதைத் தான் செய்கிறது. இதை வரவேற்க வேண்டுமே தவிர, விமர்சிக்கக் கூடாது...' என, நீண்ட விளக்கம் அளித்தார்.
இதைக் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, 'எதர்ப்பு குரலுக்கு கிடுக்கிப்பிடி போடாவிட்டால், நிலைமை மோசமாகி விடும் போலிருக்கிறதே...' என புலம்புகிறார்.