PUBLISHED ON : டிச 06, 2025 03:22 AM

'ஆடம்பர அரசியல் நடத்தியவர், இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார் என்றால், ஆச்சரியமான விஷயம் தான்...' என, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி பற்றி பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 2007 - 2012ம் ஆண்டு காலத்தில் இங்கு முதல்வராக இருந்தார் மாயாவதி.
அப்போது, உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில், தன் ஆளுயர சிலைகளையும், தன் கட்சி சின்னமான யானையின் பிரமாண்ட சிலைகளையும் அமைத்தார். இதற்காக, அரசு நிதியில் இருந்து, 2,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பின் நடந்த சட்டசபை தேர்தல்களில், மாயாவதி கட்சி தொடர் தோல்விகளை சந்தித்தது. 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில், அவரது கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாயாவதி, 'காலஞ்சென்ற தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு தினத்தில், அவர்களின் நினைவிடத்துக்கு சென்று இனி மரியாதை செலுத்த மாட்டேன். நான் செல்லும் போது மக்களுக்கு சிரமம் ஏற்படுவதால், இந்த முடிவை எடுத்துள்ளேன். எனக்காக மக்கள் கால்கடுக்க காத்திருப்பதை ஏற்க முடியவில்லை...' என்றார்.
இதை கேள்விப்பட்ட உ.பி., மக்கள், 'இந்த கரிசனமும், எளிமையும் ஏற்கனவே இருந்திருந்தால், இப்படி தொடர் தோல்விகளை சந்தித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே...' என, மாயாவதிக்காக பரிதாபப்படுகின்றனர்.

