PUBLISHED ON : டிச 31, 2025 02:32 AM

'தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, தோல்வி பயத்தில் உளறத் துவங்கி விட்டாரே...' என, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான, பினராயி விஜயனை பார்த்து, பா.ஜ., மற்றும் காங்கிரசார் கிண்டல் அடிக்கின்றனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தமிழகத்துடன் சேர்த்து, இங்கும், 2026 ஏப்ரல் அல்லது மே மாதம், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், பெரும்பாலான இடங்களை பிரதான எதிர்க்கட்சியான, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது; பா.ஜ.,வும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.
ஆளும் இடது ஜனநாயக முன்னணி, பின்னடைவை சந்தித்த நிலையில், திருச்சூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், இடதுசாரி கட்சிகளின் வெற்றியை தடுப்பதற்காக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு கவுன்சிலர்கள், பா.ஜ.,வுக்கு தாவினர். இதனால், அங்கு இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர், பஞ்சாயத்து தலைவராக ஆக முடியாமல் போய் விட்டது.
இதையடுத்து, 'பா.ஜ., தன் பண பலத்தை பயன்படுத்தி, காங்கிரஸ் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி விட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் உடந்தை.
'பஞ்சாயத்து தேர்தலுக்கே, இந்த அளவுக்கு பண பலத்தை பயன்படுத்துகின்றனர் என்றால், சட்டசபை தேர்தலில் என்னவெல்லாம் செய்வரோ...' என, கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார், பினராயி விஜயன்.

