PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM

'இது என்ன புது தலைவலியாக இருக்கிறது...' என, குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர், பீஹாரில் உள்ள ஆளும் தே.ஜ., கூட்டணி கட்சியினர்.
இங்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., ஆகிய கட்சிகள் அடங்கிய தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, இந்த கூட்டணியில் இடம்பெறவில்லை. ஆனாலும், பா.ஜ., போட்டியிட்ட தொகுதிகளில் சிராக் பஸ்வான் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
அதே நேரத்தில், ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். இதனால், ஐக்கிய ஜனதா தளம் பல தொகுதிகளில் தோல்வி அடைந்தது.
கடந்த ஐந்தாண்டுகளில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது தே.ஜ., கூட்டணிக்கு வந்துள்ளார் சிராக் பஸ்வான்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசில், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தானே நேரடியாக களம் இறங்கப் போவதாக சமீபத்தில் அவர் தெரிவித்தார்.
'சிராக் பஸ்வான் ஏற்கனவே எம்.பி.,யாக உள்ளார். இன்னும் நான்காண்டு பதவிக்காலம் உள்ளது. பின், எதற்காக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும். கடந்த தேர்தலை போல், இந்த தேர்தலிலும் எங்கள் கட்சியை காலி செய்ய திட்டம் போடுகிறாரோ...?' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.