PUBLISHED ON : செப் 01, 2026 12:00 AM

'எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்றனரே...' என, பா.ஜ., தலைவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார், காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்.
'நீட்' வினாத்தாள் கசிவு முறைகேட்டை கண்டித்து, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில், டில்லி உள்ளிட்ட பல இடங்களில் மாணவ அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்; இந்த போராட்டங்கள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தன.
இதையடுத்து, ராகுலும் களத்தில் இறங்கினார். டில்லியில், பிரதமர் மோடி வீட்டருகே, தன் கட்சியினருடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்; பார்லிமென்டிலும் இது குறித்து பிரச்னை எழுப்பினார்.
இதன்பின், எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் டில்லியில் போராட்டம் நடத்தினார்.
இந்த விஷயம் ராகுலின் கவனத்துக்கு சென்றதும், 'நாங்களும் நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்; பார்லிமென்டிலும் இது குறித்து கேள்வி எழுப்புவோம்...' என, 'வீடியோ' வெளியிட்டார்.
ராகுலின் இந்த நடவடிக்கைகளை, பா.ஜ.,வினர் கடுமையாக விமர்சித்தனர். 'எந்த விஷயத்துக்கு போராட்டம் நடத்துவது என்பது கூட, ராகுலுக்கு சொந்தமாக யோசிக்கத் தெரியாதா; மற்ற கட்சிகளை பார்த்து தான் போராட்டம் நடத்துவாரா...? நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள, அவர் தினமும் பேப்பர் படிக்க வேண்டும்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
